லக்னோ, மே 21 சமாஜ்வாடி கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உண்மையாகவே இருக்கும் என்றும், வரும் தேர்தலி லும் ‘இந்தியா’ கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 19.5.2026 அன்று கலந்து கொண்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷிடம், “வரவிருக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கூட்டணி தொடரும்
அதற்குப் பதிலளித்துப் பேசிய அகிலேஷ்: “சமாஜ்வாடி கட்சி பல கூட்டணிகளை அமைத்துள்ளது. எங்களுக்குக் கூட்டணிகளில் நல்ல அனுபவம் உண்டு. எங்கள் கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு லாபத்தையே உறுதி செய்துள்ளது; ஒருபோதும் யாருக்கும் நாங்கள் துரோகம் செய்ததில்லை. இன்று இருக்கும் கூட்டணி இனியும் தொடரும்.
கூட்டணியில் இடங்களைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. கடந்த மக்களவைத் தேர்தலின் போதும், ‘பிரச்சினை இடங்களைப் பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியதுதான்’ என்று நான் கூறியிருந்தேன். அதே சூத்திரத்தை மீண்டும் கையிலெடுப்போம். வரும் தேர்தலிலும் கேள்வி இடங்களைப் பற்றியதாக இருக்காது, வெற்றியைப் பற்றியதாகவே இருக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.
நீட் விவகாரத்தில் பாஜகமீது சாடல்
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார். பாதிக்கப்பட்டவர்கள்: “நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பாதிக்கப்பட்ட 22 லட்சம் மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் அய்ந்து குடும்ப உறுப்பினர்கள் எனக் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 1.1 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாதிப்பு
அவர்களில், சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இம்மாநிலத்தில் மட்டும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட 22 லட்சம் பேர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.”
மிகப்பெரும் ஆளுங்கட்சியான பாஜகவை எதிர்த்துப் போட்டி யிடுவதால், அதற்குத் தகுந்த வலுவான தேர்தல் உத்திகளையும், வியூகங்களையும் வகுத்து சமாஜ் வாடி-காங்கிரஸ் கூட்டணி தேர் தலைச் சந்திக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
