பீகாரில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து அளிக்கப்பட்ட 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது! காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

2 Min Read

பாட்னா, செப்.1- பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாங்கள் அளித்த 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா, பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எந்த அரசியல் கட்சியிடம் இருந்தும் புகார் வரவில்லை என்ற பொய்ச் செய்தியை தனது வட்டாரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் விதைத்து வருகிறது. உண்மையில், திருத்தப் பணியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி 89 லட்சம் புகார்களை அளித்துள்ளது.

மீண்டும் நடத்த வேண்டும்

எங்கள் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், அந்தப் புகார்களுடன் சென்றபோது, அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. தனி நபர்களிடம் இருந்து வரும் புகார்கள் மட்டுமே ஏற்கப்படும், அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, ஒட்டு மொத்த திருத்தப் பணியையும் மீண்டும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணி இன்று நிறைவு

இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்காளர் அதிகார பேரணி இன்று (1.9.2025) முடிவடைகிறது.

இன்று (1.9.2025) தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்தில் இருந்து அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலை வரை பேரணி நடக்கிறது. ராகுல் காந்தி, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி, கம்யூனிஸ்டு எம்.எல். தலைவர் திபங்கர் பட்டாச்சார்யா, விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி ஆகியோர் நடைப்பயணமாக செல்கிறார்கள். இந்தப் பேரணி இதுவரை 25 மாவட்டங்களில் 110-க்கு மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் 1,300 கி.மீ. தூரம் நடந்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *