சென்னை, ஜூன் 05 சென்னை புளியந்தோப்பு பகுதியில் மாநகராட்சிப் பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில், தவெக சட்டமன்ற உறுப் பினர் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகார்களுக்கு சென்னை மாநக ராட்சி மேயர் பிரியா விரிவான விளக்க மளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“விழா காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவெக சட்டமன்ற உறுப்பினர் காலை 9 மணிக்குத்தான் விழா நடைபெற்ற இடத்திற்கு வந்தார். நாங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதற்கு முன்பாகவே ரிப்பனை வெட்டி விழாவை தொடங்கியிருக்கலாம். ஆனால், நாங்கள் அவருக்காகக் காத்திருந்துதான் விழாவைத் தொடங்கினோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நெறிமுறைப்படியே குத்துவிளக்கு ஏற்றப்பட்டது
குத்துவிளக்கு ஏற்றுவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த மேயர், மாநகராட்சியின் வழக்கமான நெறிமுறை களே பின்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மாநகராட்சி நெறிமுறைகளின்படி முதலில் மேயர் என்ற முறையில் நான் குத்துவிளக்கு ஏற்றினேன். அடுத்தடுத்த வரிசை: அதன் பின்னர் அய்ஏஎஸ் அதிகாரிகளும், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரும், இறுதியாக கவுன்சிலர் மற்றும் வார்டு தலைவர்களும் விளக்கேற்ற வேண்டும் என்ற வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது.
மெழுகுவர்த்தி சர்ச்சை: நடந்தது என்ன?
நிகழ்வின் போது சட்டமன்ற உறுப் பினருக்கு மெழுகுவர்த்தி வழங்கப்பட வில்லை என்ற புகாரை மறுத்த மேயர், அங்கு நடந்ததை விவரித்தார்:
“இந்த நிகழ்வின் போது, நெறிமுறை களின்படிதான் அனைத்தும் நடைபெற்றது. யாரும் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. குத்துவிளக்கு ஏற்றும் போது சட்டமன்ற உறுப்பினருக்கு மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் அவரது பகுதிச் செயலாளர் அதனை வாங்கிக் கொண்டார். இது அரசு மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால், நெறிமுறைகளின்படி சட்டமன்ற உறுப்பினரிடமே மீண்டும் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதனை வாங்க மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்” என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்கள் குறித்து நாம் ஒன்றும் கூற முடியாது. மாநகராட்சி நெறிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து மரியாதைகளும் முறையாக வழங்கப்பட்டது” என மேயர் பிரியா தனது விளக்கத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
