பரந்தூர்-க்கு சொன்ன ‘நோ’.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!

4 Min Read

சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஜோசப் விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜோசப் விஜய் சொன்ன ‘நோ’, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள் கட்டமைப்புத் திட்டங்களையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள்

பரந்தூர் திட்டத்தை மய்யமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த மாபெரும் பொருளாதார மற்றும் தொழில்துறை காரிடார் (Economic Corridor) தற்போது சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியிலும், சென்னை மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

விமான நிலையம், அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள், ‘Aero City’ எனத் தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கவிருந்த திட்டங்கள் அனைத்தும் முடங்கும் அபாயத்தில் உள்ளது.

32,700 கோடி பரந்தூர் பசுமை விமான நிலையம்

தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், சுமார் 32,700 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் இந்த பரந்தூர் பசுமை விமான நிலையம் திட்டமிடப்பட்டது. ஆண்டுக்குச் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள் (Runways), மாபெரும் சரக்குப் போக்குவரத்து மய்யம் (Cargo Hub) மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி (AeroCity) ஆகியவை இந்த மெகா திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இத்தகைய மாபெரும் விமான நிலையம் கைவிடப்படும் பட்சத்தில், அதனைச் சார்ந்து வரவிருந்த பல்லாயிரக் கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்கட்டமைப்புகளும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரந்தூர் மெட்ரோ காரிடார்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து முகவரியே மாறவிருந்தது. குறிப்பாக, பூவிருந்தவல்லி, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய முக்கியத் தொழில்துறை பகுதிகளைப் பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் 15,906 கோடி ரூபாய் மதிப்பில் 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு அதிவேக மெட்ரோ ரயில் காரிடார் திட்டமிடப்பட்டிருந்தது.

சுமார் 20 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருந்த இந்த வழித்தடத்திற்கான நிலம் கைப்பற்றல் மற்றும் ஆரம்பகட்டப் பணிகளுக்காக 2,126 கோடி ரூபாய் ஏற்கெனவே முந்தைய தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழலில் விமான நிலையத் திட்டம் முடக்கம் காரணத்தால், சென்னை மாநகரையும், அதன் மேற்குத் தொழில் மண்டலங்களையும் இணைக்கவிருந்த இந்த அதிவேக மெட்ரோ கனவுத் திட்டமும் முழுமையாகக் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு விரைவுச்சாலை, அதிவேக ரயில்

இதேபோல் பரந்தூர் விமான நிலையத்தை பன்னாட்டு லாஜிஸ்டிக்ஸ் மய்யமாக மாற்றுவதற்குப் போக்குவரத்து இணைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கவிருந்தன. சென்னை – பெங்களூரு விரைவுச்சாலையுடன் (Chennai-Bengaluru Expressway) பரந்தூர் நேரடியாக இணைக்கப்படவிருந்தது.

இதுமட்டுமன்றி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரயில் காரிடாரில் (HSR Corridor) பரந்தூர் ஒரு முக்கிய நிறுத்தமாக அமையவிருந்தது.

மேலும், விமான நிலையப் போக்குவரத்தை எளிதாக்க இரண்டு முக்கிய சாலை வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டிருந்தன. முதலாவதாக, பல்லூர் முதல் சோகண்டி வரையிலான மாநில நெடுஞ்சாலை-58 (SH-58) பகுதியை 23.8 கிலோமீட்டர் நீளத்திற்குச் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது.

இரண்டாவதாக, ஒரகடம் தொழில்துறை காரிடாரை இணைக்கும் வகையில் சிங்கபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை சென்னை பெரிபரெல் ரிங் ரோடு (CPRR) வழியாக 30.7 கிலோமீட்டர் நீள புதிய சாலை வழித்தடமும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முடங்கும் தொழில் வாய்ப்புகள்

சிறீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பகுதியை பரந்தூர் விமான நிலையம், மெட்ரோ, விரைவுச்சாலை மற்றும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க இந்த உள்கட்டமைப்பு அத்தியாவசியமாக இருந்தது.

இதன் மூலம் கிடங்குகள் (Warehousing), மின்னணு சாதனத் தயாரிப்பு (Electronics Manufacturing), விண்வெளி உள்கட்டமைப்பு (Aerospace Logistics) மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த உள்கட்டமைப்புச் சங்கிலி உடைந்தால், சென்னைக்கு மேற்கே அமையவிருந்த இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதாரக் காரிடார் தொடக்கத்திலேயே முடங்கிப்போகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *