லக்னோ, செப். 09- உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில், கிழக்கு புறவழிச்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பாகத் தாம், ஜஹர்வீர் பாபா கோகா ஜி மகாராஜ், கோகா நாத் ஜி ஆகியோருடன் தொடர்புடைய முக்கியமான ‘புனித’த் தலமாகும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், பதாயூன் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 32 பேர் பாகத் தாமுக்கு சென்று விட்டு, தனியார் வாகனத்தில் சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டம், பாசி மற்றும் படா கிராமங்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் (7.9.2026) அதிகாலை 1 மணியளவில் வந்த கொண்டிருந்த அந்த வாகனம், சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்நிகழ்வில் 12 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 16-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டுக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை
புதுடில்லி, செப்.9 காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
பின்னர் தமிழ்நாடு அரசின் சார்பில், “காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி வறட்சி காலத்தில் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 7.8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கருநாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே நீரை திறக்க முடியாத நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா காவிரியில் திறந்துவிட வேண்டும். இதனை செப்டம்பர் 9-ம் தேதி(இன்று) முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.
