புதுடில்லி, செ.1- டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒன்றிய உள்துறை அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் ஒன்றிய ரிசர்வ் காவல் படை அதிர்ச்சியளிக்கும் பதிலை அளித்துள்ளது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, ஒன்றிய ரிசர்வ் காவல் படை ஒரு அங்கமான அதிவிரைவுப் படை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது குறித்து தகவல் அறியும் சட்டம் மூலம் விவரங்கள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஒன்றிய ரிசர்வ் காவல் படை டில்லி போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்தியது “மனித உரிமை மீறல் கிடையாது” எனக் கூறி, இது தொடர்பான தகவல்களை வழங்க மறுத்துவிட்டது.
தகவல் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், அதே காரணத்தைச் சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு அதிகாரியும் தகவல்களை வழங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதையே ஒன்றிய அரசு மறுத்து வந்தது. ஆனால், ஆதாரங்களுடன் உண்மை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்க அரசு மறுத்தது.
தற்போது, பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்ட பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை மனித உரிமை மீறலாகவே கருத முடியாது என்று உள்துறை அமைச்சரகம் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகரீகமடைந்த எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், அமைதியான வழியில் போராடும் மாணவர்கள் மீது இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், நீதி கோரியும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
