பெங்களூரு, ஆக.17 கருநாடக மாநில பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்வில் அம்மாநில சட்டமேலவை உறுப்பினர் என்.ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றியபோது, அதற்குரிய வழக்கமான மரியாதையை அளிக்காமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘த்வஜ பிரணாம்’ வணக்க முறையை பின்பற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருநாடக மாநில எதிர்கட்சியினர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர் ‘‘ஹிந்துத்துவவாதிகளுக்கு தேசபக்தி என்பது வெறும் தேர்தல்களில் வாக்கு பெறுவதற்கான உத்தியே தவிர உண்மையானது அல்ல’’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேர்ந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. முன்னதாக, கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றியபோது மல்லிகார்ஜுன கார்கே தனது வயது முதிர்வு காரணமாக நிற்க முடியாமல் இருக்கை கேட்ட நிகழ்வை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேசிய கீதத்திற்கு செய்யப்பட்ட அவமரியாதை என்று அரசியலாக்கினர்.
ஆனால், தங்களின் சொந்தக் கட்சி உறுப்பினரே தேசியக்கொடிக்கு மரியாதை தராமல், ஒரு ஆர்.எஸ்.எஸ். முத்திரையைக் காட்டிய போதிலும், அதை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கண்டிக்காமல் அமைதி காப்பதாக எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
இதுதான் பி.ஜே.பி.யின் ஹிந்துராஜ்ஜியம்?
Leave a Comment
