புதுடில்லி, ஆக. 6- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மொழிகளைக் கற்பதை கட்டாயமாக்கி யுள்ள புதிய கொள்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020இன் (NEP 2020) பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2026–2027-ஆம் கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
மாணவர்கள் கட்டாயமாக 3 மொழிகளைக் கற்க வேண்டும். அதே சமயம், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 3ஆவது மொழிக்குத் தனித்தேர்வு நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியிருந்தது.
சிபிஎஸ்இயின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வழக்குகள் தொடரப்பட்டன.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இம்மனுக்கள் குறித்து அவசர முறையீடு செய்யப்பட்டது.
“புதிய கல்வியாண்டு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால், 3ஆவது மொழியைக் கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்களோ, பாடப்புத்தகங்களோ தயார் நிலையில் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும் பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.”
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த மனுக்களை அவசரமாக விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
