புதுடில்லி, ஜூன் 12 டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மய்யத்தில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (11.6.2026) நடைபெற்ற நிதி ஆயோகின் 11ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:
l தமிழகத்தில், 2வது எய்ம்ஸ் மருத்துவமனையை, கோவையில் அமைக்க அனுமதி தர வேண்டும். அதற்கான, நிலத்தை தமிழக அரசு வழங்க, தயாராக உள்ளது.
l குலசேகரன்பட்டிணத்தில் உள்ள இந்திய விண்வெளி உற்பத்தி மையத்தை, தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்.
l செங்கல்பட்டு – திருச்சி 6 வழிச்சாலை; திருச்சி – கரூர் 6 வழிச்சாலை; கரூர் – கோவை 6 வழிச்சாலை; மாதவரம் – சோழவரம் இடையே உயர்மட்ட மேம்பால சாலை வழித்தடம், சென்னை – கன்னியாகுமரி அதிவேக ரயில் வழித்தடம் விரைந்து அமைத்து தர வேண்டும்.
l தமிழகத்தில் ‘பாரத் நெட்’ 2ம் கட்ட திட்டமானது, 97 சதவீதம் வரை நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள கடைசிகட்ட இணைப்பு வழங்குவதில் சவால்கள் உள்ளன. அவற்றை தீர்த்துவைத்து, அனைத்து கிராமங்களையும் இணைய வசதிக்குள் கொண்டு வர, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l ஒகேனக்கல் 3வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, 2,283 கோடி ரூபாய் வழங்க, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில், அந்த நிதியை, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல், வழங்க வேண்டும்.
l சமர சிக்க்ஷா எனப்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, 3,284 கோடி ரூபாயை, எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி வழங்க வேண்டும். புதிய கல்வி கொள் கையை செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமல், இந்த நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.
l உலக அளவில் தனித்துவமாக விளங்கும், தொன்மையான நுாலான திருக்குறளை, தேசிய இலக்கியமாக அறிவிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.
l எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்., –- ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டின்கீழ் உள்ள அனைத்து இடங்களையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பிக் கொள்ள அனுமதிதர வேண்டும்.
l தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கப்படுவதையும், மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இலங்கை, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள, தமிழ்நாடு மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
