துபாய், ஜூன் 10- துபாயில் 8.6.2026 அன்று நடந்த சாலை விபத்தில், இந்தியத் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பழுதடைந்து சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய இலகுவான பேருந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
துபாய் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போது அந்த லாரியின் பின்புறமாக வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், போதிய இடைவெளியைப் பேணாமலும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பலமாக மோதியுள்ளார்.
இதில் இலகுவான பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதை துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“எங்கள் அதிகாரிகள் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து சென்று காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையான உயர்வு!
சென்னை, ஜூன் 10- தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எம் சாண்டின் ஒரு யூனிட் விலை முன்பு ரூ. 650 முதல் ரூ. 700 வரை இருந்தது, தற்போது ரூ. 900 ஆக உயர்ந்துள்ளது. பி சாண்டின் விலை ரூ. 800-லிருந்து ரூ. 1,000 ஆகவும், ஜல்லியின் விலை ரூ. 450 முதல் ரூ. 500-லிருந்து ரூ. 600 ஆகவும் உயர்ந்துள்ளது.
அண்மையில், குவாரிகளை மூட அரசு உத்தரவிட்ட பின்னணியில், எம் சாண்ட் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதே அளவில் இருக்க, விநியோகம் குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலை கட்டுமானத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
