புதுடில்லி, மே 22- சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’ முறையில் மதிப் பீடு செய்ததில் குளறுபடி ஏற் பட்டுள்ளதாக வெளியான தகவல் களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்ட வட்டமாக மறுத்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்
நாடு முழுவதும் சுமார் 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியாகின. இதில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருப்பினும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பல மாணவர்கள் எதிர் பார்த்ததை விட மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்த முறைதான் சிபிஎஸ்இ முதல்முறையாக விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி மூலம் மதிப்பிடும் முறையை அறிமுகப் படுத்தியது.
போதிய முன்னேற்பாடுகள் இல்லாததாலும், கால அவகாசம் குறைவு என்பதாலும் விடைத்தாள்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படவில்லை என்றும், அதுவே மதிப்பெண் குறையக் காரணம் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கல்வி வாரியம் விளக்கம்
இந்த புகார்களை முற்றிலும் மறுத்து சிபிஎஸ்இ வாரியம் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த விளக்கத்தில் கூறியிருப்ப தாவது: “விடைத்தாள்களை ஸ்கேன் செய்தல், அதன் தரத்தை சரிபார்த்தல் மற்றும் மதிப்பிடுதல் என திரையில் மதிப்பிடும் முறையின் ஒவ்வொரு நிலையிலும் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளன. இதற்கான தொடர் கண்காணிப்பும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. எனவே, விடைத்தாள்கள் ஸ்கேன் செய்ததில் குளறுபடி நடந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை.”
தேர்வுகளை நடத்துவதிலும், விடைத்தாள்களை மதிப்பிடுவதிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்புமிக்க தேசிய நிறுவனமாக சிபிஎஸ்இ செயல்பட்டு வருகிறது. இதனால், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியாகும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே மாணவர் களும், பெற்றோர்களும் நம்ப வேண்டும் என்றும் சிபிஎஸ்இ கேட்டுக்கொண்டுள்ளது.
