மதுரை, மே21 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், விடுதி களின் பெயர்களில் முன்னொட்டுகளா கவோ அல்லது பின்னொட்டுகளாகவோ இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்களை நீக்க தாக்கலான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ராகுல் தாக்கல் செய்த பொது நல மனுவின் விவரம் வருமாறு:
தென்மாவட்டங்களிலுள்ள பள்ளி களில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு முற்றிலும் மறைந்துவிடவில்லை. மாறாக, அது வேறொரு வடிவத்தை எடுத்துள்ளது. நலிந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தனியே ஒதுக்கி வைக்கப்படுவதோடு, பள்ளிகளில் தூய்மை பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பள்ளிகளில் ஜாதி பாகுபாடு, வன்முறைகளை களைவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. பள்ளிகள், விடுதிகளின் பெயர்களுக்கு முன்னொட்டுகளாகவோ அல்லது பின்னொட்டுகளாகவோ பயன்படுத்தப்படும் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்றம்,‘பள்ளிகள், விடுதிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். அவை அமைந்துள்ள இடத்தின் பெயருடன் அரசு பள்ளிகள், அரசு விடுதிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்’ என 2025 இல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றவில்லை.
தென்மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், விடுதிகளின் பெயர்க ளில் முன்னொட்டுகளாகவோ அல்லது பின்னொட்டுகளாகவோ இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். ஜாதி பெயர்களை குறிப்பிடாத வகையில் அவற்றிற்கு பொருத்தமான புதிய பெயர்களை சூட்ட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மணி பாரதி ஆஜரானார். நீதிபதிகள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநருக்கு அழைப்பாணை அனுப்ப உத்த ரவிட்டு வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
