சென்னை, மே 21- நடப்பாண்டு பிஇ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்துள்ளது.
பி.இ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்ப்பதற்கான இணைய வழி விண்ணப்பப்பதிவு மே 3ஆம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மய்யங்கள் நிறுவப்பட்டுள்ளன.
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வரும் நிலையில் 19.5.2026 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2,06,586. அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 89 ஆயிரத்து 397 பேர் சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர். ஜூன் 2ஆம் தேதி விண்ணப்ப பதிவு நிறைவடையும், அசல் சான்றிதழ்களை ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 5ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனைத்தொடர்ந்து ஜூன் 29ஆம் தேதி இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
தலைமைச் செயலக
அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு வேலைக்கு வர வேண்டும்! அதிகாரிகள் உத்தரவு
சென்னை, மே 21– முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காலையில் தலைமை செயலகம் வந்துவிடுவதால், அரசு ஊழியர்களும் காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காலையிலேயே வந்துவிடுவதால், அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்குள் தங்களின் இருக்கைக்கு வருவதை அதிகாரிகள் தற்போது கட்டாயமாக்கி உள்ளனர்.
தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் பணிக்கு வந்துவிட வேண்டும். பணி நேரம் மாலை 5.45 மணிக்கு நிறைவடையும். அதிகபட்சமாக காலை 10.10 மணி வரை மட்டுமே தாமதமாக வர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் தாமதித்தால், வருகை பதிவேடு மூடப்பட்டு ஆப்சென்ட் அல்லது விடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச சேர்க்கை
நாளை குலுக்கல் முறை தேர்வு!
சென்னை, மே 21- சென்னை மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தனியார் பள்ளி இலவச சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 2026-2027ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்த விண்ணப்பங்கள்: 7,004 தகுதியான விண்ணப்பங்களில் 5,386 குலுக்கல் முறை தேர்வு. சென்னையிலுள்ள 609 பள்ளிகளில் தகுதியான குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நிகழ்வு நாளை (மே 22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
முக்கிய அறிவிப்பு: விண்ணப்பித்த பெற்றோர், இணைய வழியில் தாங்கள் பதிவு செய்த விண்ணப்பப் படிவத்துடன், நாளை நடக்கும் குலுக்கல் நிகழ்வில் அந்தந்தப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணையத்தில்
வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்கள் வண்டல் மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வண்டல் மண் தேவைப்படுவோர் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியத் தேவையில்லை. tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ ஈ-சேவை இணையதளம் மூலமாகவே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி இந்த நடைமுறை முற்றிலும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் வண்டல் மண் எடுப்பதற்கான உரிய அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
இந்த புதிய இணைய வழி நடைமுறை மூலம் காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன், மட்பாண்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் இடைத்தரகர்கள் இன்றி எளிதாகப் பயன்பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
