புதுடில்லி, மே 18 டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான என்சிஆர் (NCR) மண்டலத்தில், சிஎன்ஜி (CNG) எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று (17.5.2026) மீண்டும் அதிரடியாக கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த விலை உயர்வுகளின் காரணமாக, டில்லியில் இதுவரை இல்லாத அளவாக சிஎன்ஜி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது அங்கு ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டில்லி வரலாற்றிலேயே சிஎன்ஜி விலை 80 ரூபாயைக் கடப்பது இதுவே முதல்முறை என்பதால், ஆட்டோ, டாக்சி மற்றும் வணிக ரீதியிலான கார் ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தத் தொடர் விலை உயர்வு தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும், இந்த நிலைமை எப்போது சீராகும் என்றும் வாகன ஓட்டிகள் தங்களின் அச்சத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38-ஆக உயர்வு
குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் பிறப்பிப்பு!
புதுடில்லி, மே 18 நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி குடியரசுத் தலைவர் அதிரடி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற் போதுள்ள 33-இல் இருந்து 38-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தற்போது சுமார் 93 லட்சம் (93,00000) வழக்குகள் நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடக்கின்றன. இந்த சுமையைக் குறைக்கவும், நீதித்துறைப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் கூடிய பிறகு, இந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாகப் புதிய நிரந்தரச் சட்டம் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் மூலம், தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணை வேகம் எடுக்கும் என்றும், மக்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள காலதாமதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
