அமராவதி நகர், மே 17- ஆந்திராவில் 3ஆவது குழந்தையை பெற்றுக் கொள்வோருக்கு 30 ஆயிரம் ரூபாயும், 4ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் 40 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை போன்ற சவால்களை சந்திக்க முதலமைச்சர் சந்திரபாபு மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்து இருந்தார். இந்த கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் இணையர்களுக்கு பல்வேறு நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 3ஆவது மற்றும் 4ஆவது குழந்தைகள் பெற்றெடுக்கும் இணையருக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார். சிறீகாகுளம் மாவட்டம், நரசன்னபேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நமது சமூகம் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். 3ஆவது குழந்தை பிறந்தால் உடனடியாக ரூ.30 ஆயிரம், 4ஆவது குழந்தை பிறந்தால் ரூ.40 ஆயிரம் வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சட்டசபையில் உரையாற்றிய சந்திரபாபு, 2ஆவது குழந்தை பெற்றெடுக்கும் இணையர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.
