குவஹாத்தி, ஏப். 27- கடந்த 2018ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள பஞ்சுரி கசாரி கிராமத்தில், குழந்தை கடத்தல் வதந்தியால் இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
குழந்தை கடத்தல் வதந்தி
கடந்த ஜூன் 8, 2018 அன்று, நீலோத்பல் தாஸ் மற்றும் அபிஜீத் நாத் ஆகிய இரு இளைஞர்கள் கர்பி ஆங்லாங் மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் பரவிய “குழந்தை கடத்தல்காரர்கள் நடமாட்டம்” என்ற போலி வதந்தியை நம்பிய கிராம மக்கள், இளைஞர்களின் வாகனத்தை மறித்து கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்தனர். இந்தியா முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
20 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை மற்றும் வன்முறையில் நேரடியாகத் தொடர்புடைய 20 நபர்களுக்கு ஆயுள் கால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த மற்ற 25 நபர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஆதாரமற்ற வதந்திகளை நம்பி சட்டத்தைக் கையில் எடுப்பது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
