பல்கலைக் கழக நிர்வாகக்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் உறுதி!

viduthalai
3 Min Read

தாளவாடி பழங்குடி மக்கள் நலனை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக் கழகம்) பாதுகாக்கும்!

தஞ்சாவூர், நவ. 26 தாளவாடி பழங்குடி மக்கள் நலனை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக் கழகம்) பாதுகாக்கும் என்று பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் உறுதியளித்து உரையாற்றினார்!

சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி, தலமலை, பேர்மாளம், அரேபாளையம் உள்ளிட்ட 44 மலை கிராமங்களில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர் நிலை பல்கலைக் கழகம்) தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் முகாமிட்டு விழிப்புணர்வு மற்றும் நலவாழ்விற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

புலியும், யானையும், மந்திகளும், மானும் நட மாடும் அடர்வனத்தில் வாழும் மக்களுக்குப் போதிய ஊட்டச்சத்தோ, உத்திரவாதமான மருத்துவ வசதியோ, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளோ அரிதாக இருப்பதை தன் பயணத்தின் போது கண்டறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்களின் மன நிலையை அறிந்த மாணவ, மாணவியர் உடனடியாக அந்தப்பகுதிக்குச் செல்ல பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்று பயணம் மேற்கொண்டனர்.

ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள், ஏற்றம் இறக்கமான, அலைஅலையான பெரும் மலைத் தொடரில் வசிக்கும் பழங்குடி மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உரையாடி நம்பிக்கை ஊட்டினர். ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் பெரியார் நிறுவனங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 22.11.2024 அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 190 பழங்குடியின மக்கள் பங்கேற்று பயன டைந்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் வீ. அன்புராஜ், மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் நலவாழ்வுத்துறை அலுவலர்கள் பங்கேற்று மக்களுக்கான பல நலத் திட்டங்களை வழங்கினர்.

கலந்துரையாடல் – பாராட்டு!

திராவிடர் கழகம்

இந்த முயற்சியில் இறங்கிய பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆற்றிய பணியினை பாராட்டும் விதமாக பல்கலைக் கழக நிர்வாகக்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் அவர்கள் நேற்று (25.11.2024) பிற்பகல் மாணவர்களை அழைத்து கலந்துரையாடி பாராட்டினார்.

மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்த அவர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த மக்களை ஒவ்வொரு குழுவாகச் சென்று சந்தித்து உதவிகளை மேற்கொள்வோம் என்றார்.

மற்ற பயணங்களைவிட இத்தகைய சேவையோடு கூடிய பயணம் மாணவர்களுக்கு அளித்துள்ள அனுபவங்கள், நட்பு, மனிதநேயம், மகிழ்ச்சி முதலியவற்றை அறிந்து மாணவர்களை வெகுவாகப் பாராட்டினார். இந்த மாணவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக வருவார்கள் என பெருமிதத்துடன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மாணவர்களுக்குச் சான்றிதழ்!

மாணவர்களை வழிநடத்திய பேராசிரியர்கள், தந்தை பெரியார் பாசறையில், தமிழர் தலைவர் ஆசிரியரின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர்கள் என்பதால் சிறப்பாக வழி நடத்தியுள்ளனர் என பாராட்டினார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு கலந்துரையாடி வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

பங்கேற்றோர்

நிகழ்வில் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் முனைவர் மல்லிகா, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் விஜயலெட்சுமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் அனுசுயா பிரியா, தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் இளங்கோ பாண்டியன், பெரியார் புரா ஒருங்கி ணைப்பாளர் முனைவர் வெ.சுகுமாரன், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் மகிழ்வோடு பங்கேற்றனர்.

மாணவர்களும், பேராசிரியர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், சகோதரராய் பாவிக்கும் அன்புராஜ் அவர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் அனைத்து சேவைப் பணிகளிலும் முன்னின்று செயல்படுவோம் என உறுதியளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *