
‘ஜென்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தினை – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மிக அருமையாக – தமிழின் தலைசிறந்த மொழியாக்க வல்லுநர் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள். ‘எளிமையாக வாழும் கலை’ என்ற தலைப்பில் 2021இல் வெளியிடப்பட்ட (இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு 2019இல் வெளிவந்தது) நூலை மறுவாசிப்புச் செய்து மகிழ்ந்தேன்.
அன்றாட வாழ்வியல் புத்தரது அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. (பின்னால் அவரையே கடவுளாகி வழிபாட்டுக்குரியவராக்கி சடங்கு, சம்பிரதாய சிறைக்குள் ‘பவுத்தம்’ என்ற புத்த மார்க்கத்திற்குள் அடைத்து விட்டனர். அதற்கு மூலகாரணம் யார், எது என்பது உலகறிந்த செய்தி).
பெரிதும் தெம்பூட்டும் வகையில் நமது வாழ்க்கைப் பாதை அமைய வேண்டுமானால் அதற்கு பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டிட வேண்டாம்.
நமது மனதை நாம் சீர்படுத்தி செப்பனிட்டுக் கொண்டாலே போதும்;
அதற்கு முக்கியம் – அடிப்படை தன்னம் பிக்கையாகும்.
‘எளிமையான வாழ்க்கையே நமக்கு என்றும் ஏற்றம் தரும் என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்.
‘படாடோபம்’, ‘பிறர் மெச்ச வாழ வேண்டும்’ என்ற பேைதமை நம்மை அலைபாயும் மனதாக அலைக்கழிக்க வைக்கிறது.
இந்த நூலில் அதன் ஆசிரியர் ஷன்மியோ மசுனோ, ஜப்பானின் 450 ஆண்டுகள் பழைமையான ஜென் புத்தக் கோவிலின் தற்போதைய தலைமைத் துறவியாக இருந்து வருகிறார்.
பல பரிசுகளைப் பெற்றுள்ள அவர் உலகெங்கும் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில், குறிப்பாக ஹார்வேடு கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக் கழகம், பிரவுண் பல்கலைக் கழகம் ஆகிய கல்வி நிலையங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
‘‘உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவது கடினமாக இருக்க வேண்டியதில்லை. அதற்கு உங்களுடைய பழக்கங்களிலும், உங்களுடைய கண்ணோட்டத்திலும் ஒரு சில நுண்ணிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் போதும்’’.
‘‘அடுத்தவர்களுடைய விழுமியங்களால் நீங்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
தேவையற்ற கவலைகள் உங்களை வதைக்க அனுமதிக்காதீர்கள் – மாறாக, பயனற்ற அனைத்து விஷயங்களையும் உதறித் தள்ளி விட்டு, மிக எளிமையான வாழ்க்கை வாழ முயற்சியுங்கள்’’ என்கிறார்.
வாசகத் தோழர்களே, நமது எளிமை நமக்கானது. அது விளம்பர வெளிச்சத்திற்குப் பயன்படும் எளிமையாக ஆகவே கூடாது!
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்க்கை, நாம் முடிவு செய்து, வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இல்லாமல், பெரிதும் ‘பிறருக்காகவோ’, ‘ஊருக்காகவோ’, ‘உலகத்திற்காகவோ’ நம்மை, நமது ‘சுயத்தை’ இழந்து – சொக்கட்டான் ஆட்டத்தில் காய்களை உருட்டுவது போன்று உருட்டப்படும் தன்மையில் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாலோ, அறிந்தோ அறியாமலோ வாழ்ந்து கொண்டிருக்கும் மன நிம்மதியற்ற வாழ்க்கை.
அதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், பிறருடன் ஒப்பிடும் முறை என்ற ‘பலி பீடத்தில்’ நம்மை நாமே நிறுத்திக் கொண்டு, பிறர் நம்மை பலியிடாமலே நாமே நம்மை பலியிட்டுப் பாழாகிறோம்.
நுகர்வோர் கலாச்சார காலத்தின் உச்சத்தின் விளைவாக, கடன் வாங்கியாவது, பிறரை வியப்படைய வைக்க, நமக்குத் தேவையில்லாவிட்டாலும்கூட ஒரு ‘டாம்பீக வாழ்க்கை’ என்ற வெளிச்சத்தில் நின்று காட்டப் படுகின்றது.
அந்த நூலில், ஓர் எளிய அறி வுரையை ‘ஜென்மாஸ்டர்’ கூறுகிறார்.
அறவுரைகளாகவும் அவை பளிச்சிடுகின்றன!
‘மூன்று நஞ்சுகளுக்கு’ முழுக்குப் போடுங்கள்! என்ற தலைப்பில் குறிப்பிடுகையில்…
மூன்று நஞ்சுகள்:
- பேராசை
- கோபம்
- அறியாமை
நாம் பேராசையால் தாக்கப்படும் போது, நாம் விரும்புகின்றவற்றை நாம் கைவசப்படுத்திய பிறகும்கூட, நமக்கு இன்னும் அதிகமானவை வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்கு ஏற்படுமேயன்றி, நமக்கு ஒருபோதும் மனநிறைவு ஏற்படாது.
இரண்டாவது, கோபம் தலைக்கேறும்போது நாம் அதைப் பிறர்மீது காட்டுகிறோம்.
(அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவர், நாம் பாதிக்கப்பட்டது போல் நமக்குப் புரியாமலே மற்றொருவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்).
மூன்றாவது, அறியாமை – தந்தை பெரியார் போன்ற ஒப்பற்ற சிந்தனையாளர் – அதனால் அதை ஒழிப்பதற்கென்ற ஒரு தனி இயக்கம் உருவாக்கினார்.
பகுத்தறிவு வீரர் அமெரிக்க நாட்டு ராபர்ட் ஜி. இங்கர்சால் சொன்னார்: ‘‘அறியாமையைவிட உலகின் மனித குலத்திற்கு பெரிய நோய் வேறொன்றுமில்லை.’’
உலகின் பழம் பெரும் சிந்தனைப் புரட்சியாளரான கிரேக்கத்து சாக்ரட்டீஸ், தன்னுடைய அறிவு மொழிகளில் கூறிய, வரலாற்றில் இடம் பெற்ற ஓர் அறிவு மொழி என்ன தெரியுமா?
‘‘நான் அறிந்ததெல்லாம் அறியாமை ஒன்றுதான்’’ என்றார் – மிகுந்த தன்னடக்கத்துடன்.
ஆம். நாம் நம் அறியாமையை எப்போது புரிந்துகொள்ளுகிறோமோ அப்போதுதான் நாம் அறிவைப் பெறத் தொடங்குகிறோம் என்று பொருள்.
‘‘அறிதொறும் அறியாமை….’’ என்பது வள்ளுவரின் பார்வை.
(தொடரும்)
