சாமியார் நடத்தும் கோவை ஈஷா மருத்துவ சேவைக் குழு மருத்துவருக்கு எதிராக 12 மாணவிகள் பாலியல் புகார்

viduthalai
2 Min Read

கோவை, செப்.12 கல்வி நிறுவனங்களில் மாண விகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் ஈஷா யோகா மய்யத்தின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சரவணமூர்த்தி என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மய்யம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துக் குழுவில் சரவணமூர்த்தி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நடமாடும் மருத்துவக் குழு சார்பில், அரசு பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத் துவது வழக்கம். அந்த மருத்துவக் குழுவில் இருக்கும் மருத்துவர் சரவணமூர்த்தி பள்ளிகளில் நடைபெறும் மருத்துவக் முகாமில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி மருத்துவ முகாம்களுக்கு செல்லும்போது, அங்குள்ள மாணவிகளிடம் சரவண மூர்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகள் நல அதிகாரிகள் ஒரு பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதையடுத்து, மருத்துவர் சரவணமூர்த்தி தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக 12 மாணவிகள் புகார் கூறினர். இதுகுறித்து, குழந்தைகள் நலத்துறை அதி காரிகள், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் ஈஷா யோகா மய்யத்தின் நடமாடும் மருத்துவக் குழுவின் மருத்துவர் சரவண மூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரவணமூர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 33. இவர் கோவை ஈஷா யோகா மய்யத்தில் நடமாடும் மருத்துவ குழுவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். ஆலாந்துறை அரசு உயர் நிலைப் பள்ளி யில் மாணவிகளிடம், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் பரிசோதிக்காமல், அவர்களை தவறான நோக்கத்தில் நேரடியாக தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை ஈஷா யோகா மய்யம் தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருத்து வராக பணியாற்றியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதை அறிகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதி யான நிலைப்பாடு. இந்த வழக்கில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில், 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கடந்த வாரம் உதவிப் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *