சென்னை, மே 7 தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், ஆளுநர் ஆர்.என்.அர்லேக்கருக்கும் இடையிலான சந்திப்பில் இழுபறி நீடிப்பதால், தவெக ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜயிடம், மெஜாரிட் டியை நிரூபிப்பது தொடர்பாக ஆளுநர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்:
எண்ணிக்கை பலம்: “தற்போதுள்ள 113 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? நிலை யான அரசை வழங்க முடியுமா?”
“தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கப் போகும் மற்ற கட்சிகள் எவை?”
“குறைந்தது 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும். யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியாது.” என்று ஆளுநர் கேட்டதாகத் தெரிகிறது.
விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினாலும், ஆளுநர் கேட்ட நேரடியான கேள்வி களுக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை என்று சொல்லப்படுகிறது. விஜய் அளித்த விளக்கத்தில் திருப்தி அடையாத ஆளுநர், பதவி ஏற்பு குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப் பட்டுள்ளன.
விஜயுடனான சந்திப்பைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேக்கர் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதிமுக: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) ஆளுநர் நேரில் வர அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்ததாக காபந்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இந்த முட்டுக்கட்டையால், அரசியல் களம் அடுத்த சில மணி நேரங்களில் எந்தத் திசையிலும் திரும்பலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் தனிப் பெரும்பான்மை மிக்க கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்று ஆளுநர் மாளிகை சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளது. காங்கிரசுடன் சேர்த்து 112 இடங்கள் ஆதரவு என்று கடிதம் கொடுத்ததால்தான் போதிய இடங்களைக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறியுள்ளது.
