சென்னை பெரியார் திடல் புத்தக நிலைய மேலாளரும், திராவிடன் நிதியின் மேனாள் தலைவரும் – பெரியார் மணியம்மை அறக்கட்டளை உறுப்பினரும் (PMIST), கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான கொள்கையாளர் மானமிகு டி.கே. நடராசன் (வயது 87) நேற்றிரவு (22.8.2024) மறைவுற்றார் என்ற தாங்கொணா துயரச் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.
அரசு பணி ஓய்வுக்குப் பின் 25 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் திடலில் இருந்து பல்வேறு பணிகளில் பொறுப்பேற்று, திறன்பட செயல்பட்டவர் – எதிலும் கண்டிப்பாக இருக்கக் கூடிய கடமை வீரர்.
மானமிகு டி.கே.நடராசன் அவர்கள் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி பட்டுக்கோட்டை ந. இராமாமிர்தம் அவர்களின் மருமகன் ஆவார். அவர் வாழ்விணையர் கொள்கை வீராங்கனை குஞ்சிதம் அம்மையார் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில் முழு அளவில் இயக்க – நிறுவனப் பணிகளை ஆற்றி வந்தவர். இயக்கத்துக்குத் தாராளமாக நன்கொடை அளிக்கும் பண்பாளர்!
அவரது இழப்பு – அவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல – இயக்கத்திற்கே பேரிழப்பாகும்.
அவர் மறைவால் பெருந் துயரத்திற்குத் தள்ளப்பட்ட மகன் ஆடிட்டர் மணவாளன் (USA), மகன் கண்ணுதுரை, மருமகள்கள், பேரப் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், குறிப்பாகக் கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணியாளர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து அவர்தம் அளப்பரிய பணிகளை நினைவு கூர்கிறோம்.
அவர் உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (23.8.2024) காலை வைக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது. கண் கொடை நேற்றிரவே அளிக்கப்பட்டுள்ளது.
வாழ்ந்தபோதும், மறைந்தபோதும் முன்மாதிரியாகத் திகழ்ந்த மனிதநேயருக்கு, கொள்கையாளருக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.8.2024
குறிப்பு: மறைந்த மானமிகு டி.கே. நடராசன் அவர்களின் இல்லத்திற்கு இன்று (23.8.2024) காலை குடும்பத்துடன் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
டி.கே. நடராசன் அவர்களின் மகன் கண்ணுதுரை மற்றும் அவரது வாழ்விணையர் சுசீலாவிடம் நேரி்லும், அமெரிக்காவில் உள்ள மற்றுமொரு மகன் மணவாளனிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்த கழகத் தலைவர் – டி.கே. நடராசன் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.