ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மேனாள் பொருளாளருமான கணேசமூர்த்தி (வயது 77) இன்று (28.3.2024) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
கல்லூரியில் படிக்கும் காலந்தொட்டு தி.மு.க. மாணவர் அணியில் தீவிரமாகப் பணியாற்றியவர்; ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணி வீரர்; தி.மு.க.வில் ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளராகத் திறம்படச் செயலாற்றியவர்.
ம.தி.மு.க. பிரிந்தபோது சகோதரர் வைகோவோடு இணைந்து பணியாற்றியவர். மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர்; ஒரு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தவர். மதி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்தவர். ‘பொடா’ சட்டத்தின்கீழ் 19 மாத காலம் சிறைவாசம் கண்டவர்.
திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பல முறை பங்கேற்று கொள்கை முழக்கம் செய்தவர். அடக்கமும், பண்பும் கொண்ட பொது நலத் தொண்டர்; கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டவர்.
அத்தகைய பெரு மகனாரின் திடீர் மறைவு பெரும் வேதனைக்குரியது. அவர் பிரிவால் பெருந் துயரத்துக்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தாருக்கும், மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்களுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.3.2024