ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.15- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக் கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை, ஆட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.ராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, இணையதள அணி ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை அமல்படுத்தியதற்கும், ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததற் கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியது:

“தமிழ்நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு நிதிநிலை அறிக்கையை தயார் செய்தது. நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண் டும் என்ற முதலமைச்சரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழ் நாட்டை வஞ்சிக்க ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது. தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.37,500 கோடி வேண்டும் என முதலமைச்சர் கேட்ட நிலையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

பாஜகவின் கூட்டணி ஆளும் ஆந்திரா, பீகாருக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஓரவஞ்சனை தானே. அதைப் போலவே சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு மாநில அரசு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில், ஒன்றிய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. இது கட்சி பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை. நீட் தேர்வை அமல்படுத்தி தமிழ்நாட்டின் 20 மாணவர்களின் உயிரை பறித்த பாஜக அரசு, ஒரு கொலைகார அரசு. இந்த 20 பேரும் ஒரு கட்சியை சேர்ந்தவர்களா? நீதிக்காக தங்களது உயிர்களை தந்திருக்கின்றனர்.

இதுவொருபுறம் இருக்க, மேகேதாட்டு அணையைக் கட்டுவதைத் தடுக்க முடியாது எனக் கருநாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து சொல்லி வருகின் றனர். 2015ஆம் ஆண்டு கருநா டக அமைச்சர் வீட்டில் நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று சதித் திட்டத்தைத் தீட்டினர். இதில், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சரோ அணை கட்டுவதைத் தடுக்க மாட்டோம் என்றார்.

இதேபோல், ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பும் மீத்தேன் உள்ளிட்ட வாயு எடுக்கும் திட்டங்கள் மூலம் டெல்டா மாவட்டத்தை மயான பூமி ஆக்கிவிடுவார்கள். நிரந்தரமான தீர்வே கிடைக்காது. அணையைக் கட்டி முடித்த பிறகு கூச்சலிட்டு பயனில்லை.

ராணுவத்தை வைத்து அணையைப் பாதுகாப்பார்கள். அணையைக் கட்ட விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டை வாழ வைப்பதற்கான திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகிறது. அவர்களுக்குப் பக்க பலமாகத் தோழமைக் கட்சிகள் ஒரு சேர நிற்கும்” என்றும் அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *