‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுவதோடு – அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்!

Viduthalai
5 Min Read

ஆட்சியை பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களின் விழி திறக்கவேண்டிய நிலை!

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!

சேலம், ஜூலை 16- ‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை, உலக நாடுகள் பாராட்டுவது என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது இருக்கிறதே, ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும். ‘திராவிட மாடல்’ ஆட்சியை கண்களை மூடிக்கொண்டு பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களுக்கு விழி திறக்கவேண்டிய நிலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மாலை – செய்தியாளர்களுக்குப் பேட்டி
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தினர் கடந்த 11 ஆம் தேதி அய்ந்து குழுக்களாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டனர். சேலத்தில் நிறைவுறும் பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (15.7.2024) சேலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நாம் எடுக்கவேண்டிய சூளுரைகள்
இன்றைக்கு மிக அதிகம்!
கல்வி வள்ளல் காமராசர், ”பச்சைத் தமிழர்” என்று தந்தை பெரியாரால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு இரட்சகர் என்று மிகப்பெரிய அளவிற்கு சிறப்பிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் எடுக்கவேண்டிய சூளுரைகள் இன்றைக்கு மிக அதிகம்.
குலதர்மத்தை ஒழித்து, சமதர்மத்தை நிறுவுவதற்காக வந்த காமராசர் அவர்களுடைய தேவை இன்றைக்கும், என்றைக்கும் தேவை.
அவருடைய சேவை எப்படி நம்மை யெல்லாம் உயர்த்துவதற்குப் பாடுபட்டதோ, அதுபோலவே, அவருடைய தேவை இன்றைக்கும் இருக்கிறது.

காமராசர் அவர்கள் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கல்வி வள்ளல். நம்முடைய காமராசர் அவர்களுடைய புகழ் என்றைக்கும் நிலைக்கவேண்டும். வருங்கால தலைமுறைக்கு அவருடைய சாதனை என்பது கல்வித் துறையிலும், மூடிய பள்ளிகளைத் திறந்த வகையிலும் மிகப்பெரிய அளவில் நமக்கெல்லாம் ஒரு பெரிய ஊக்க சக்தியைத் தருவதாகும்.
நீட் தேர்வினுடைய எதிர்ப்புக் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது!
தந்தை பெரியார் அவர்கள் எப்படி குல தர்மத்தை ஒழிக்கப் பாடுபட்டாரோ, அதற்குக் காமராசர் அவர்கள் எப்படி பயன்பட்டாரோ, அதேபோலத்தான், இன்றைக்கு நீட் தேர்வை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய வாய்ப்பில், நல்ல வாய்ப்பாக, தமிழ்நாட்டிலிருந்து அந்த எதிர்ப்புக் குரல் தொடங்கப்பட்ட நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகருடைய தலைமையில்தான். அகில இந்திய அளவில் ராகுல் காந்தி போன்றவர்கள், காங்கிரஸ் கட்சியே அதனை ஏற்கக்கூடிய அளவிற்கு வந்து, இன்றைக்கு வடபுல மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள் எல்லாமே நீட் தேர்வினுடைய கொடுமைகளை விளக்கிச் சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு வழிகாட்டும் –
நிச்சயம் வெற்றி பெறுவோம்!
அதனை எங்களுக்கு விளக்கியத்திற்கு நன்றி என்று, நம்முடைய முதலமைச்சருக்கு, ராகுல் காந்தி அவர்கள் சொல்லியிருக்கின்றார் என்று சொன்னால், தமிழ்நாடு கலங்கரை வெளிச்சமாக இருந்து, தத்துவங்களுக்கு மட்டுமல்ல, போராட்டங்களுக்கும் தளமாக அமையும், வழிகாட்டும், நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இதுதான் காமராசர் அவர்களுடைய பிறந்த நாளில் நாம் எடுக்கக்கூடிய சூளுரை, விழைவாகும்.
காலை உணவுத் திட்டம் என்கிற ஓர் அற்புதமான திட்டம் – இன்றைக்கு விரிவாக்கம்!

செய்தியாளர்: காமராசர் பிறந்த நாளான இன்று, தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டு இருக்கிறது; இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: முதன் முதலாக பகல் உணவுத் திட்டம் என்பதை திராவிட இயக்கம்தான், சர்.பிட்டி. தியாகராயர் காலத்தில், வெறும் மாநகராட்சி அளவில் மட்டும் செய்தது. அப்பொழுது அதற்குமேல் அன்றைக்கு இருந்த ஆட்சிக்கு அதிகாரமில்லை; தொடர்ந்து நடத்துவதற்குப் பண உதவி இல்லை என்பதால், அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
காமராசர் அவர்கள்தான் பகல் உணவுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு காலை உணவுத் திட்டம் என்கிற ஓர் அற்புதமான திட்டத்தை ‘திராவிட மாடல்‘ ஆட்சிதான், இன்றைய முதலமைச்சர்தான் கொண்டு வந்தார்.

வெளிநாடுகளும் பின்பற்றுகின்றன!
அதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், காமராசருக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடிய அளவிற்கு அவர் இட்ட வித்து ஆலமரமாக ஆகியிருக்கின்றது என்பதற்கு அடையளமாக, அதை வளர்த்தெடுத்து, இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பாக தனியார் பள்ளிக்கூடங்கள் என்று அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தை வடபுலங்களையும் தாண்டி, கனடா நாடு பின்பற்றுகிறது. அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்து!
ஒரு மாநில அரசின் திட்டத்தை, உலக நாடுகள் பாராட்டுவது என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது இருக்கிறதே, ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்.
‘திராவிட மாடல்’ ஆட்சியை கண்களை மூடிக்கொண்டு பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களுக்கு விழி திறக்கவேண்டிய நிலை.

இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிடவேண்டும். காமராசர் அவர்கள் உயிரோடு இருந்தபொழுது, அவரைக் கொல்லு வதற்கு, அவரது வீட்டிற்குத் தீ வைத்தவர்கள் எல்லாம் இப்பொழுது காமராசர் முகமூடியை அணியவேண்டிய கட்டாயம் வந்திருக்கின்றது. ஆனால், மக்கள் ஏமாறமாட்டார்கள்.
காமராசர் யார்? அவருடைய தத்துவம் என்ன என்று புரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, காமராசர் அவர்களை ஒரு முகமூடியாக யாரும் பயன்படுத்தினால், அவர்களுடைய முகமூடியும் கிழித்தெறியப்படும்.
அரைவேக்காடுகளுடைய ஏட்டுச் சுரைக்காய் தத்துவம் எதற்கும் பயன்படாது!

செய்தியாளர்: காலை உணவுத் திட்டத்தைப் பற்றி நாங்கள் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை திட்டத்திலேயே கொண்டு வந்தோம் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அரைவேக்காடுகளுடைய ஏட்டுச் சுரைக்காய் தத்துவம் எதற்கும் பயன்படாது. கறிக்கு உதவாது. இதற்குத் தெளிவாக செயலில் பதில் சொல்லவேண்டுமே தவிர, வெறும் வாய்ப் பேச்சு பேசக்கூடாது.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *