சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 300 – சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு

Viduthalai
5 Min Read

சென்னை, ஜுன் 23 சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு நேற்று (22.6.2024) வெளியிட்டார்.

அதில், திருச்செங்கோடு, கொல்லங்கோடு, சோளிங்கர் மற்றும் கம்பம் ஆகிய நகராட்சிகளில் ரூ.45.50 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். திருச்சி மாநகராட்சி மற்றும் திருவண்ணா மலை நகராட்சியில் பழைய தேக்க திடக் கழிவுகளை பயோமைனிங் முறையில் ரூ.55.70கோடியில் அகற்றி நிலம் மீட்டெடுக்கப்படும்.மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 418.57 கி.மீ மண் சாலைகள் ரூ.285.73 கோடியில் தார் சாலை, கான்கிரீட் அல்லது பேவர்பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஆகியவற்றால் சேதமடைந்த சாலைகள் 2,016.41 கி.மீ. நீளத்துக்கு ரூ.987.19 கோடியில் சீரமைக்கப்படும்.

பாதாள சாக்கடைத் திட்டம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.115 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடியில் பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்படும். 16 புதிய பள்ளி கட்டடங்கள் ரூ.30 கோடியில் அமைக்கப்படும். நகர்ப்புறங்களை பசுமையாக்கி, இயற்கை சூழலை மேம்படுத்த 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டு திடல்கள் ரூ.10 கோடியில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும்.

இரும்பு பாலங்கள்
பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே 3 இடங்களில் ஈசிஆர் – ஓஎம்ஆர்-அய் இணைக்கும் வகையில் இரும்பு பாலங்கள் ரூ.21 கோடியில் அமைக்கப் படும். சென்னை மாநகராட்சியில் உள்ள 10 நீர் நிலைகள் ரூ.12.50 கோடியில் புனரமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் 7 புதிய எரிவாயு எரி மேடைகள் ரூ.12 கோடியில் அமைக்கப்படும். 15 பேரூராட்சிகளில் ரூ.125 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 12 பேரூராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். 25 பேரூராட்சிகளில் ரூ.45 கோடியில் எரிவாயு எரி மேடைகள் அமைக்கப்படும்.

சமுதாய கழிப்பிடங்கள்
75 பேரூராட்சிகளில் ரூ.10 கோடியில் புதிய சமுதாய கழிப்பிடங்கள் அமைக்கவும், 140 பேரூராட்சிகளில் ரூ.16.18 கோடியில் ஏற்கெனவே உள்ள சமுதாய மற்றும் பொதுக்கழிப்பிடங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த 575 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.315.50 கோடியில் மேம்படுத்தப்படும். காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டுகூட்டு குடிநீர் திட்டம் ரூ.800 கோடியில் செயல்படுத்தப்படும். வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ.80 கோடியில் செயல்படுத்தப்படும்.

குடிநீர் உந்து குழாய் பதிக்கப்படும்
எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் ஒன்றிய மய்ய குழாயிலிருந்து மாதவரம் குடிநீர் உந்து நிலையத்துக்கு ரூ.40 கோடியில் புதிய குடிநீர் குழாய்பதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக, ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்றக் கூடம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னதாக பதில் அளித்து பேசும்போது, ‘‘சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. அதனால், சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200-இல் இருந்து 300 ஆக உயரும் வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்
சட்டப்பேரவையில் நேற்று (22.6.2024) நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்சிகளை பேரூராட்சியாகவும் , பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் 138 நகராட்சிகள் உள்ளன அவை 159 ஆக உயரும். 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சி கள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் தெரிவித்துள்ளார்.

தெரு நாய்களால் பெரும் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை
தலைநகர் சென்னையில் நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாய் கடி சம்பவங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே. என். நேரு சட்டமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர், “தெரு நாய்கள் பிரச்சினை இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. கரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகள் இதை முறையாகக் கையாளாத காரணத்தால் இந்த பிரச்சினை வந்துள்ளது.

பணக்காரர்கள்: நிறையப் பணக்காரர்கள் நாய்களை வளர்க்கிறார்கள். அதைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆணையரும் இது தொடர்பாகத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். தினமும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். இருப்பினும், பூங்காவிற்கு அழைத்து வரும் போது அல்லது நடைப் பயிற்சிக்கு கூட்டி வரும் போது சில தவறுகள் நடந்துவிடுகின்றன.

கண்காணிப்பு: இந்த விவகாரத்தில் 78 பயிற்சி பெற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, மூன்று நாள்கள் கண்காணித்து.. அந்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவதே இவர்கள் பணி.. இந்த விவகாரத்தில் நாங்கள் அதிக கவனம் எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி.. கூடுதலாக அதிகாரிகளை நியமித்து நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் பணியை அரசு தொடர்ந்து எடுக்கும்.

மாடுகள் பறிமுதல்
அதேபோல் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுபோல சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல்முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகப் பிடிக்கப்பட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்” என்றார்.

நடவடிக்கைகள்: சென்னையில் இப்போது நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாகச் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அதைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *