அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை!

viduthalai
7 Min Read

ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்குகிறீர்கள்? என்று கேள்வி கேட்பவர்களைப்பற்றி கவலைப்படாதவர் தமிழ்மறவர் பொன்னம்பலனார்!
உடையார்பாளையம் வேலாயுதம் உயிர்த்தியாகம் செய்தார்; பொன்னம்பலனார் வாழ்க்கையையே தியாகம் செய்தார்!

உடையார்பாளையம், மார்ச் 15 நீங்கள் ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக் கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்குகிறீர்கள்? என்றெல்லாம் தமிழ்மறவர் வை.பொன்னம்பலனாரிடம் கேட்டார்கள். அதைப்பற்றியெல்லாம் பொன்னம்பலனார் அவர்கள் கவலையேபடவில்லை. என்ன வேண்டுமானா லும் செய்துகொள்ளுங்கள் என்றார். உடையார்பாளையம் வேலாயுதம் உயிர்த்தியாகம் செய்தார் என்றால், பொன்னம்பலனார் வாழ்க்கையையே தியாகம் செய்தவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடையார்பாளையத்தில்
முப்பெரும் விழா!
கடந்த 10-3-2024 அன்று மாலை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடை யார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத் தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில், படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தமிழ்மறவர் வை.பொன்னம்பலனார் தமிழாசிரியர். தமிழ்க் கற்றுக்கொடுத்தார். இங்கே உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சொன்னார் அல்லவா – வேலூர் கந்தர் பள்ளிக் கூடத்தில், பொன்னம்பலனார் பணியாற்றிய காலகட்டத் தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய மூத்த மகள் சரசுவதி கண்ணப்பர் அங்கே இருந்தார். அப் பொழுது புரட்சிக்கவிஞர் அவர்களும் அங்கே வந்து தங்குவார்.
அப்பொழுது மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால், பொன்னம்பலனார் அவர்கள், புரட்சிக்கவிஞரோடு, தனித்தமிழ் உணர்வோடு மிகப்பெரிய அளவிற்கு வாதாடுவார்.
அந்தக் காலகட்டத்தில் ‘‘நவீன நந்தனார்” என்ற தலைப்பில் நாடகம் போட்டார்கள். அதற்கெல்லாம் தமிழாசிரியர் வை.பொன்னம்பலனார்தான் காரணம் ஆனவர்.

புரட்சிக்கவிஞரின்
‘‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்!’’
அதுமட்டுமல்ல, புரட்சிக்கவிஞருடைய ‘‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற மிக முக்கியமான பகுதியில்,
‘‘ஓ! என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது,
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.” என்ற ஒரு நீள பகுதி இருக்கிறது. இதை விரித்து எழுதுக என்று மாணவர்களுக்குச் சொல்லி வினா – விடையாக வைத்துவிட்டார்.

ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்?
ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்?
இதை எப்படி நீங்கள் வினா – விடையில் வைக்கலாம்; நீங்கள் ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்கு கிறீர்கள்? என்றெல்லாம் தமிழ்மறவர் வை.பொன் னம்பலனாரிடம் கேட்டார்கள். அதைப்பற்றியெல்லாம் பொன்னம்பலனார் அவர்கள் கவலையே படவில்லை.
என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்றார். உடையார்பாளையம் வேலாயுதம் உயிர்த்தியாகம் செய்தார்; இவர் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்.
‘‘வாழ்க்கை முழுவதும் எங்கே வேண்டுமானாலும் என்னை இடமாற்றத்தைத்தானே செய்ய முடியும். என்னுடைய சம்பளத்தைத்தானே உங்களால் நிறுத்த முடியும். என்னுடைய கொள்கைப் பணியை தடுத்து நிறுத்த முடியுமா, உங்களால்? என்னுடைய உணர்வை உங்களால் மாற்ற முடியுமா?” என்று கேட்டார்.
இன்றைக்கு அவருடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார்; இன்னொருவர் லண்டனில் இருக்கிறார்.

மனுதர்மத்தை மிதித்து,
சுக்கலாக்கிய இயக்கம்!
ஒரு காலத்தில் மனுதர்மத்தைப் போட்டு மிதித்து, சுக்கலாக்கிய இயக்கம் இந்த இயக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் குடும்பங்கள் போதுமே!
உடையார்பாளையம் வேலாயுதம் – ஜெகதாம் பாள் ஆகியோரின் மகள் மங்கையர்க்கரசி – இராமச்சந்திரன்; மகன் வழக்குரைஞர் மதியழகன், அமெரிக்கா.
மணிமேகலை மூலமாகப் பிள்ளைகள் மாலதி – சிவப்பிரகாசம் தொழிலதிபர், சென்னை. மாதுரி – அசோக். அதேபோன்று இளங்கோவன் இங்கே வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மின்சார வாரியத்தில் பொறிஞர்களாக இருக்கிறார்கள்.

‘‘உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ!’’
‘‘இச்சிபட்னவாடுக்கு இன்ஜினியரிங்” என்று தெலுங் கில் சொல்வார்கள். ‘‘கொடுத்துவச்சவன் இன்ஜினியரிங் படிக்க முடியும். எல்லோராலும் படிக்க முடியாது’’ என்றெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு இந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் வீணாகிவிட்டார்களா? அல்லது இந்தக் குடும்பம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதா?
‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ” என்பதைப் போல கொள்கை உணர்வு. அது சாதாரணமானதல்ல.
பொன்னம்பலனார் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி இங்கே சொன்னார்கள். ஜாதி ஒழிப்பைப்பற்றி சொன்னார்கள். அதில் இன்னொரு தகவலைச் சொல்கிறேன்.
‘ஜாதி ஒழிப்பு’ என்று பொன்னம்பலனார் ஏன் தன் பிள்ளைக்குப் பெயரை வைத்தார் என்றால், அப் பொழுதுதான் அரசமைப்புச் சட்ட நகலை எரித்தால், மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றாலும், நாங்கள் எரிப்போம் என்று சொன்ன நேரத்தில்தான், ‘‘ஜாதி ஒழிப்பு” என்று பெயர் வைத்தார் பொன்னம்பலனார்.
மருத்துவக் கல்லூரிக்கு நேர்காணலுக்குச் செல்கிறார், அங்கே இருந்த குழுத் தலைவர் கேட்கிறார், ‘‘உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு” என்று பெயரா?” என்று.
“ஆமாம், எங்கள் குடும்பத்தினர் அப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்” என்றார்.

பூவராகன் அவர்களுடைய மூன்றாவது மகன் டாக்டர் பழனியப்பன்!
கேள்வி கேட்டவர் யாரென்றால், இந்தப் பின்னணி யில் வளர்ந்து, டாக்டராகி அங்கே அமர்ந்திருக்கிறார். மறைந்த அவருடைய பெயர் டாக்டர் பழனியப்பன். பூவராகன் அவர்களுடைய மூன்றாவது மகன். அவர்தான் சேர்மனாக இருந்தார்.
இந்தப் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது; அது போதும் என்று சொன்னார்.
திராவிடர் கழகத்திற்கு யார் தலைவர்? என்ற கேள்வியை மட்டும் கேட்டார்.

வேர்களும் பலமாக இருக்கின்றன; விழுதுகளும் பலமாக இருக்கின்றன!
ஆகவே, ‘‘அழிக்கிறேன், ஒழிக்கிறேன்” என்று சொன்னவர்களுடைய நிலைமை என்னாயிற்று என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
வாழையடி வாழையாக ஆலமரமாக இருக் கிறது; வேர்களும் பலமாக இருக்கின்றன; விழுதுகளும் பலமாக இருக்கின்றன – அசைக்க முடியாமல் இருக்கிறது என்பதற்கு அடையாளம் தான் இத்தனை பேரும் செம்மையான பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது.
எங்களுக்குப் படிப்பு வராது என்று சொன்னானே அன்று. இன்றைக்கு மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தானே நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, க்யூட் தேர்வு போன்றவையெல்லாம்.

‘‘திராவிட இயக்கம் என்ன செய்தது?’’ என்று
சிலர் புரியாமல் கேட்கலாம்!
‘‘திராவிட இயக்கம் என்ன செய்தது?” என்று சிலர் புரியாமல் கேட்கலாம் – அவர்களுக்காகத்தான் இங்கே ஒரு பெரிய பட்டியலைப் போட்டிருக்கிறார்கள்.
முனைவர் அருள் எம்.எஸ்சி., பி.எச்டி.,
செல்வகுமார் எம்.ஏ.,
காசிநாதன் பி.எஸ்சி., அக்ரிகல்ச்சர்
அன்புநெடுமாறன் பகுத்தறிவு அவர்களைப் படிக்கின்ற காலத்திலிருந்து எனக்குத் தெரியும். பிள்ளை கள் லண்டனுக்குப் போகும்போது வாழ்த்துகள் சொல்லி அனுப்பியிருக்கின்றோம்.

கல்வி நெறிக்காவலர்
நெ.து.சுந்தரவடிவேலு
‘பகுத்தறிவு’ என்று பெயர் இருப்பதைப் பார்த்ததும், கல்லூரி விடுதியில் தகராறு வந்தது. நம்முடைய கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் கேட் டார், ‘‘பகுத்தறிவு என்பது யார்? ஓ, பொன்னம்பலனார் மகளா? தனியாக ஒரு இடத்தையே கொடுங்கள்” என்று சிறப்பு இடம் கொடுத்தார்.
இப்படி எல்லா இடங்களிலும் பார்த்தீர்களேயானால், கல்வி நீரோடை நாடெலாம் பாய்ந்தது என்றால், அது திராவிடத்தால் அல்லவா! இந்த இருவருடைய தியாகத் தால் அல்லவா!
இந்த இயக்கத்திற்கு அடிக்கட்டுமானம் எது?
தமிழ்மறவர் பொன்னம்பலனாருடைய அடிக்கட்டு மானம்.
நம்முடைய உடையார்பாளையம் ஆசிரியர் வேலா யுதத்தினுடைய உழைப்பு, தியாகம். இவை போன்றவை தான் ஆட்சிக்கும் சரி, கட்சிக்கும் சரி அடித்தளங்களாக இருக்கக் கூடியவை.
எனவே, இந்த வரலாற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான் இந்த முப்பெரும் விழாக்கள்.

‘இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நமக்குப் படிப்பு வராது என்று சொன்னார்களே, இன்றைக்கு அந்த நிலை இல்லையே! ஆகவேதான், இதுபோன்ற விழாக்கள் நடத்தும்பொழுது, இளைஞர் களுக்குச் சொல்கிறோம், ‘‘இளைஞர்களே, நீங்கள் ஒரு இயக்கத்திற்கு, ஒரு கொள்கைக்கு வரும்பொழுது, வெறும் பதவியை நோக்கி வராதீர்கள்!” என்று.
அண்ணா அவர்கள் ஒரே வரியில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார்.
‘‘கொள்கை என்பது வேட்டி; அது அடிப்படையானது. பதவி என்பது துண்டு; என்னுடைய வசதிக்காக அதைப் போட்டிருக்கிறேன்” என்றார்.
துண்டு இல்லாமல் என்னால் வெளியில் வர முடியும்; ஆனால், வேட்டி அணியாமல் வர முடியுமா?

சிறிய சிறிய புத்தகங்களை
ஏன் வெளியிடுகிறோம்?
ஆசிரியர் வேலாயுதம் அவர்களைப்பற்றியும், தமிழ் மறவர் பொன்னம்பலனார் அவர்களைப்பற்றியும் இரண்டு சிறிய புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.
ஏன் சிறிய புத்தகங்களாக வெளியிட்டு இருக்கின் றோம் என்றால், நம் இளைஞர்களுக்கு இப்பொழுது பொறுமை இருப்பதில்லை. அதனால்தான், பெரிய புத்தகமாக வெளியிடவில்லை. ஏனென்றால், பெரிய புத்தகமாக இருந்தால், இளைஞர்கள் படிக்காமல், புத்த கத்தை வாங்கியதும் அப்படியே வைத்துவிடுவார்கள்.
அதனால்தான், அய்யா அவர்களுடைய காலத்தி லிருந்து சிறிய சிறிய புத்தகங்களாக வெளியிடுகிறோம். பேருந்தில் பயணம் செய்யும்பொழுதே அதனைப் படித்து முடித்துவிடுவார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை
அடுக்கிக்கொண்டே போகலாம்!
இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் வேகமாகப் படித்துவிடலாம். ஏனென்றால், நடத்துநர் ‘‘டிக்கெட், டிக்கெட்” என்று தொந்தரவு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. பேருந்தில் மகளிருக்கு இலவசம்தான்! முன்பெல்லாம், கையிலிருந்து பெண்கள் பணத் தைக் கொடுக்கவேண்டும்; டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, சில்லறையை வாங்கவேண்டும். இவ் வளவு தொல்லைகளையும் இல்லாமல், அவற்றை ஒழித்த நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆட்சியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு விஷயத்தைப்பற்றி பாராட்டுவதற்குள், அடுத்ததாக 10 விஷயங்கள் வந்துவிடுகின்றன!
நிறைய சாதனைகளை செய்துகொண்டே இருக் கிறார். இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், அதனை நாங்கள் பாராட்டுகிறோம், எழுதுகிறோம், சுட்டிக்காட்டுகிறோம். நாங்கள் ஒரு விஷயத்தைப்பற்றி பாராட்டுவதற்குள், அடுத்ததாக 10 விஷயங்கள் வந்து விடுகின்றன.
பேசுவதற்கு நேரமில்லை; எழுதுவதற்கு இடமில்லை. சாதனைகள் மேல் சாதனைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.
ஒரு சாதாரண செய்தி நம்முடைய முதலமைச்சரின் காதுகளுக்குச் சென்றால், உடனே அவர் விரைவாக செயல்படுகிறார்.
இந்த இயக்கம் எப்படிப்பட்டது? எப்படிப்பட்ட பாரம்பரியம்? எப்படிப்பட்ட வேர்களைக் கொண்டது? விழுதுகள் தயாராக இருக்கிறது – ஆட்சியிலும் சரி – வெளியிலும் சரி.
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *