முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஜன.6- “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களுக்காகச் செய்தது என்ன?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த விழாவில் 4.1.2024 அன்று பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட தமிழ்நாடு அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது” என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது” என்று கூறி ஒன்றிய அரசு இதுவரை வழங்கிய நிதி குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு விளக்கமளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த விளக்கத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது ‘திராவிட மாடல்’ அரசு.
ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாடு மக்களுக்காகச் செய்தது என்ன? ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு” என்று பதிவிட்டுள்ளார்.