சென்னை, ஜூன் 6– தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகைகளிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும், “கல்விக் கட்ட ணம் ஒன்றும் கருப்புப் பணம் அல்ல, நியாயமாக வாங்கும் கட்டணத்தை அறிவிப்பதில் என்ன தவறு?” என்றும் நீதிபதி அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று குறிப் பிட்ட தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை பள்ளிகளின் விளம்பரப் பலகைகளிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்கு நரகத்திற்கு உத்தரவிட்டது.
இதனை ஏற்று, கடந்த ஜூன் 1ஆம் தேதி தனியார் பள்ளிகள் இயக்குநர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், ஜூன் 5ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனி யார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் இந்த கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தர விடப்பட்டிருந்தது.
தனியார் பள்ளிகள் சங்கத்தின் மனு
இந்த உத்தரவை எதிர்த்து, ‘அகில இந்திய தனியார் கல்வி நிறுவ னங்களின் சங்கம்’ சார்பில் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதம்: தகவல் உரிமைச் சட்டம் (ஆர்டிஅய்) தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ போன்ற ஒன்றிய பாடத் திட்டப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப் படுத்த முடியாது.
அரசுத் தரப்பு வாதம்: இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தொடர முடியுமே தவிர, சங்கமாகத் தொடர முடியாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட்டே தீர வேண்டும்.
இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி எம்.தண்டபாணி, கட்டண விகிதங்களை வெளியிட மறுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல. நியாயமாக வாங்கும் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிப்பு செய்வதில் எந்தத் தவறும் இல்லை.” என்று நீதிபதி எம்.தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார்.
மாநில தகவல் ஆணையம் மற்றும் தனி யார் பள்ளிகள் இயக் குநரகத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து ஜூன் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
