சத்ரபதி சம்பாஜிநகர், ஜூன் 5 மகாராட்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சேலிபுரா உயர்நிலைப் பள்ளி, பானுதாஸ் சவான் திரையரங்கில், 2026 மே 31 அன்று மாலை, அவ்ரங்காபாத்தின் ‘நகரி மூல்பூத் ஹக் அபியான்’ (குடிமக்கள் அடிப்படை உரிமைகள் பிரச்சார இயக்கம்) அமைப்பானது ‘பாபாசாகேப் – பெரியார் நட்பு இயக்கம்’ சார்பில் இரண்டாவது சொற்பொழிவுத் தொடரை மிகச் சிறப்பாக நடத்தியது.
இந்த மும்மொழி கருத்தரங்கில், சமகால இந்தியாவில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சிந்தனைகளின் ஒற்றுமைகள் குறித்து விவாதிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்தனர். இதில் கல்வியாளர் சுனில் வைகேகர், பொறியாளர் தீபக் கெய்க்வாட், பேராயர் முனைவர் ஜோ. இரவிக்குமார் ஸ்டீபன், பேராசிரியர் முனைவர் லட்சுமண் யாதவ் மற்றும் பேராசிரியர் பிரதிபா அகிரே ஆகியோர் சிறப்பு உரையாளர்களாகப் பங்கேற்றனர்.
கல்வியாளர் சுனில் வைகேகரின்
தொடக்க உரை
தொடக்க உரையாற்றிய கல்வியாளர் சுனில் வைகேகர், அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரை வெறும் பாடப்புத்தகமாகப் படிக்காமல், நமது அன்றாட வாழ்க்கையிலும் சமூகச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அநீதிக்கு எதிராகப் போராடும் உத்வேகத்தை அளிப்பதற்கும், சமூக மாற்றத்திற்குப் பங்களிப்பதற்கும் இந்த ‘பாபாசாகேப்-பெரியார் ‘நட்பு’ – சொற்பொழிவுத் தொடர் உருவாக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற முழக்கத்தைக் குறிப்பிட்ட வைகேகர், பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைக்கு சமமான முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம், பெரியார் இந்த தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் வலுசேர்த்தார் என்றார்.
இத்தகைய சொற்பொழிவுத் தொடர்கள், சாதாரண குடிமக்களைப் பொது வாழ்வில் சமூக உணர்வும், அரசியல் விழிப்புணர்வும் கொண்டவர்களாக மாற்ற உதவுகின்றன என்றார்.
அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு மற்றும் அறிவு சார்ந்த அதிகாரமளித்தலை வழங்கிய அதே வேளையில், பெரியார் அநீதி மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலை வழங்கினார் என்று வைகேகர் சிறப்பித்துக் கூறினார். தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் கலாச்சாரத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை சிறப்பாக குறிப்பிட்டார்.
உரையை நிறைவு செய்யும்போது, கருத்தரங்குடன் நிறுத்திக் கொள்ளாமல் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகளை பொருளுள்ள செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொறியாளர் தீபக் கெய்க்வாட் –
“பெரியார் கட்டுக்கதையும் உண்மையும்”
‘பெரியார்: கட்டுக்கதையும் உண்மையும்’ (Periyar: Myth and Reality) என்ற தமது புத்தகத்தின் அடிப்படையில் மராத்தி மொழியில் உரையாற்றிய பொறியாளர் தீபக் கெய்க்வாட், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தமது கல்வி நிறுவனத்தில் மகாராட்டிராவின் முதல் பெரியார் சிலையை நிறுவியதற்காகக் கல்வியாளர் சுனில் வைகேகரைப் பாராட்டினார்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் தளத்திலும் பெரியார் கொண்டுள்ள நீடித்த செல்வாக்கை சுட்டிக்காட்டிய கெய்க்வாட், பெரியாரின் கருத்துக்கள் பரந்த மக்களைச் சென்றடைவதைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகள் ஏன் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான காரணங்களை ஆராய்ந்தார். ‘‘பழமைவாத மற்றும் மனுவாத சக்திகள் பலவும், பெரியாரின் சிந்தனைகளைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட்டால், அது தற்போதைய அரசியல் மற்றும் சமூக அதிகாரக் கட்டமைப்புகளைப் பெருமளவில் மாற்றிவிடும் என்று அஞ்சுகின்றன’’ என்றார்.
ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பீட்டை முன்வைத்த அவர், டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் எழுத்துக்கள் ஒரு இனிப்பான மருத்துவக் கஷாயம் (Syrup) போல இருப்பதால் நாடு முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன என்றும், அதே சமயம் பெரியாரின் கருத்துக்கள் கசப்பான மூலிகைக் கஷாயம் போல இருப்பதால் அவை பெரும்பாலும் எதிர்க்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
சமகால சமூக இயக்கங்கள், பெரியாரின் உத்தி சார்ந்த மற்றும் முடிவுகளை மய்யமாகக் கொண்ட போராட்ட மற்றும் சமூக சீர்திருத்த அணுகுமுறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்று அவர் பரிந்துரைத்தார்.
1968-இல் திமுக அரசு நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை பெரியார் விமர்சித்ததையும் கெய்க்வாட் குறிப்பிட்டார். மாநாட்டிற்காக இவ்வளவு பெரிய பணம் செலவிடப்படும் போது, விவசாயிகளின் அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பதில் ஏன் இதேபோன்ற கவனம் செலுத்தப்படவில்லை என்று பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல் சார்புகளைக் கடந்து, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பார்த்து இவ்வாறு அச்சமின்றி கேள்வி கேட்கும் குணம் சமகாலப் பொது வாழ்வில் அரிதாகவே காணப்படுகிறது என்று கெய்க்வாட் குறிப்பிட்டார்.
தனது உரையின் நிறைவாக, “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” என்று மட்டும் கூறுவது போதாது; மாறாக, “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், இல்லையெனில்…” என்று சொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்—மேலும் அந்த “இல்லையெனில்” என்பது அதிகாரிகளைப் பதிலளிக்கக் கட்டாயப்படுத்தும் நம்பகமான செயல்பாட்டுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், எச்சரிக்கப்பட்ட போராட்டத்தை உறுதியுடன் நடத்த வேண்டும். கெய்க்வாட்டின் கூற்றுப்படி, பெரியாரின் பல சர்ச்சைக்குரிய போராட்டங்கள், சமூக மற்றும் அரசியல் பொறுப்புக்கூறலை கட்டாயமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட துல்லியமான உத்தி சார்ந்த செயல்பாடுகளாகும். இந்த போராட்ட முறை இன்றும் மிகவும் பொருத்தமானது மற்றும் சமகால இயக்கங்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியது என்று அவர் வாதிட்டார்.
சக உரையாளரான முனைவர் இரவிக்குமார் ஸ்டீபனுடன் நடத்திய விரிவான உரையாடலில் இருந்து தான் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகக் கெய்க்வாட் குறிப்பிட்டார். முனைவர் ஸ்டீபனின் தனித்துவமான தாடி மற்றும் தலைப்பாகையைக் குறிப்பிட்ட அவர், அவை பெரியார் மற்றும் மகாத்மா ஜோதிராவ் புலே ஆகிய இருவரையும் நினைவூட்டுவதாகவும், இந்த இரு மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளின் வழியும், மரபும் அவரிடம் பிரதிபலிப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பேராயர் முனைவர் ஜோ இரவிக்குமார் ஸ்டீபன் – மொழி, அடையாளம் மற்றும் மொழிவாரி கூட்டாட்சி
‘திராவிடரியம் மறுமலர்ச்சி நடுவத்தின் (Dravidianism Revival Centre) நிறுவனரும், வளர்ச்சி உளவியலாளரும், ஆராய்ச்சியாளரும், ஆர்வலரும், எழுத்தாளருமான பேராயர் முனைவர் ஜோ. இரவிக்குமார் ஸ்டீபன், “தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரா வரை இந்தியாவில் மொழி, அடையாளம் மற்றும் மொழிவாரி கூட்டாட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இந்தியாவில் மொழி அரசியலின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசிய முனைவர் ஸ்டீபன், இந்தியாவின் ஒற்றுமையை ஒருபோதும் ஒரே மாதிரியான தன்மையுடன் (Uniformity) குழப்பிக்கொள்ளக் கூடாது என்று வாதிட்டார். தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், மகாராட்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மொழிவாரி மாநில உருவாக்க இயக்கங்களும் ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானவை அல்ல, மாறாக ஒரு மொழியை மற்ற மொழிகளின் மீது அரசு திணிப்பதற்கு எதிரானவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
வரலாற்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய முனைவர் ஸ்டீபன், இந்தியா ஒருபோதும் ஒற்றை மொழி நாகரிகமாகச் செயல்பட்டதில்லை என்பதைக் குறிப்பிட்டார். பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள் மற்றும் பல மொழி மரபுகளின் இணையான வளர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், வரலாற்று ரீதியாக எந்தவொரு ஒற்றை மொழியும் இந்தியாவின் கலாச்சார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தியதில்லை என்று வாதிட்டார்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் மொழி ரீதியான விளைவுகளை ஆராய்ந்த அவர், பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் வந்து எவ்வாறு புதிய நிர்வாக உயரடுக்குகளை உருவாக்கியது என்பதை விளக்கினார், அதே நேரத்தில் இது அரசியலமைப்புச் சிந்தனை, நவீன கல்வி மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுக்கான வழிகளையும் திறந்தது என்றார்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்த தவறான புரிதல்களுக்குப் பதிலளித்த முனைவர் ஸ்டீபன், இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அரசியலமைப்பின் பகுதி XVII (17)-இன் கீழ், ஹிந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாகச் (Official Language) செயல்படுகிறது, அதே நேரத்தில் ஆங்கிலம் ஒரு துணை அலுவல் மொழியாகத் தொடர்கிறது என்று அவர் விளக்கினார். இந்தியாவின் இன்னும் பல முக்கிய மொழிச் சமூகங்களுக்கு இடமளிக்கும் வகையில், எட்டாவது அட்டவணையைத் தற்போதைய 22 மொழிகளுக்கு அப்பால் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மொழி அரசியல் குறித்த பெரியார் மற்றும் அம்பேத்கரின் அணுகுமுறைகளை இந்த உரை ஒப்பிட்டுக் காட்டியது. பெரியார் ஹிந்தி திணிப்பை பார்ப்பன ஆதிக்கம் மற்றும் கலாச்சார மய்யப்படுத்துதலின் ஒரு பகுதியாகப் பார்த்தார், அம்பேத்கர் மொழிவாரி மறுசீரமைப்பை வலியுறுத்தினார். ஆங்கிலத்தை முன்னேற்றத்திற்கான ஒரு சமூக நடுநிலையான கருவியாகக் கருதினார்.
மொழி இயக்கங்களின் விரிவான வரலாற்று காலவரிசையை வழங்கிய முனைவர் ஸ்டீபன், நடராசன், தாளமுத்து, தனலட்சுமி, கீழப்பழூர் சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், பொட்டி சிறீராமுலு, கே. பி. சங்கரலிங்கனார் மற்றும் சம்யுக்த மகாராட்டிரா இயக்கத்தின் 106 தியாகிகளின் தியாகங்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
ஆங்கிலத்தைத் துணை அலுவல் மொழியாகத் தக்கவைத்துக் கொண்டதன் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்கள் உருவாவதற்கு இது பெரிதும் உதவியது என்று வாதிட்டார்.
மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறும் அதே வேளையில், கட்டாய மொழித் தேவைகளால் அவர்கள் மீது அதிகப்படியான சுமை ஏற்றப்படக் கூடாது என்று அவர் வாதிட்டார்.
அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, வலுவான மொழிப் பாதுகாப்பு, விரிவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு உள்கட்டமைப்பு, பன்மொழி வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக AI-அடிப்படையிலான மொழி கருவிகளில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முதலீடு ஆகியவற்றை வலியுறுத்தி, “கண்ணியமான பன்மொழிவாதம்” (Dignified Multilingualism) என்ற அழைப்புடன் அவரது உரை நிறைவடைந்தது.
பேராசிரியர் முனைவர் லட்சுமண் யாதவ் –
ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் சமூக நீதியும்
பேராசிரியர் முனைவர் லட்சுமண் யாதவ், “ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குமா?” என்ற தலைப்பில் இந்தியில் உரையாற்றினார்.
இந்தியாவின் உண்மையான அடையாளம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்றும், தேசியம் என்பது வெறும் புவியியல் எல்லைகளிலிருந்து மட்டும் உருவாவதில்லை, மக்களிடையே மற்றவர்கள் பால் இருக்கும் பரிவிலிருந்து வெளிப்படுகிறது என்றும் அவர் வாதிட்டார். அநீதியை எதிர்ப்பதற்கான அறிவுப்பூர்வமான துணிச்சலை அம்பேத்கரும் பெரியாரும் வழங்குகிறார்கள் என்று கூறினார்.
ஜாதியின் வரலாற்று வேர்கள் குறித்துப் பேசிய பேராசிரியர் யாதவ், வர்ண அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சமூகப் பிரிவினைகள் இன்றும் இந்தியச் சமூகத்தை வடிவமைத்து வருகின்றன என்றார். அம்பேத்கரின் செய்தி ஏற்ெகனவே வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவியுள்ளது போல, பெரியார் மற்றும் ஜோதிராவ் புலே ஆகியோரின் கருத்துக்களும் வட இந்தியாவில் இன்னும் விரிவாக இணைய வேண்டியது ஓர் அவசரத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
அம்பேத்கரை வெறும் வழிபாட்டுக்குரிய நபராக மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரித்த பேராசிரியர் யாதவ், இத்தகைய நடைமுறைகள் அவரது சிந்தனையின் பகுத்தறிவு மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று வாதிட்டார். அம்பேத்கர் மற்றும் மண்டல் இயக்கங்களுக்கு இடையே அதிக ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
நரேந்திர தபோல்ஹர், கோவிந்த் பன்சாரே மற்றும் கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவு மற்றும் முற்போக்குக் குரல்களுக்கு நினைவேந்தல் செலுத்திய அவர், அவர்களைக் கொன்றவர்கள் மறக்கப்படலாம், ஆனால் அவர்களின் கருத்துக்கள் எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றார்.
அவரது உரையின் பெரும்பகுதி, அவர் எழுதிய ‘ஜாதி ஜனகணனா’ (ஜாதிவாரிக் கணக்கெடுப்பு) என்ற புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் விளக்க உரை மற்றும் ஆய்விற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
பேராசிரியர் பிரதிபா அகிரே தலைவர் உரை:
பேராசிரியர் பிரதிபா அகிரே தலைமையுரையாற்றும் போது, கல்வியாளர் சுனில் வைகேகர் நிறுவிய பெரியார் சிலையைக் குறிப்பிட்ட அவர், நிர்வாக நடவடிக்கையைத் தொடர்ந்து அச்சிலை அகற்றப்பட்டது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார். சட்டப்பூர்வ வழிகளில் கூடிய விரைவில் அச்சிலை மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஜோதிராவ் புலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகள் ஜாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சுயமரியாதையை வளர்ப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்று பேராசிரியர் அகிரே குறிப்பிட்டார். இருப்பினும், இந்த சாதனைகள் பலவும் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் எச்சரித்தார்.
அம்பேத்கரின் பாரம்பரியம் வெறும் அடையாள முழக்கங்களாகச் சுருக்கப்படாமல், நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜாதிப் பிரிவினைகள் தொடர்ந்து நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தலைமுறை தலைமுறையாகச் சீர்திருத்தவாதிகள் பாடுபட்ட போதிலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாதிட்டார். அர்த்தமுள்ள மாற்றத்திற்குத் தொடர்ச்சியான போராட்டமும் தியாகமும் தேவை என்ற அம்பேத்கரின் செய்தியை அவர் மீண்டும் நினைவு கூர்ந்தார்.
தனது உரையை நிறைவு செய்த பேராசிரியர் அகிரே, அநீதியைக் கண்டு மௌனமாக இருக்க வேண்டாம் என்று பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
நினைவுப் பரிசுகளும் பங்கேற்பும்
கலாச்சார மற்றும் மொழி ஒற்றுமையின் அடையாளமாக, பேராயர் முனைவர் ஜோ. இரவிக்குமார் ஸ்டீபன், திருக்குறளின் மராத்தி மற்றும் போஜ்புரி மொழிபெயர்ப்புப் பிரதிகளை முறையே கல்வியாளர் சுனில் வைகேகர் மற்றும் பேராசிரியர் முனைவர் லட்சுமண் யாதவ் ஆகியோருக்கு வழங்கினார்.
பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோர் முன்னெடுத்த சமூக நீதி, பகுத்தறிவு, அரசியலமைப்பு ஜனநாயகம், மொழிச் சமத்துவம் மற்றும் மனித கண்ணியம் ஆகிய கொள்கைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான புதுப்பிக்கப்பட்ட படையலுடன் இந்த கருத்தரங்கம் நிறைவடைந்தது.
