கொளுத்தும் வெயிலில்…
மேகதாதுவில் அணைகட்ட முயலும் கருநாடகா அரசைக் கண்டித்து
திருவாரூர், மே 31 மேகதாதுவில் அணைக்கட்ட முனையும் கருநாடகா அரசின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தின் மெத்தன போக்கையும் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (31.5.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கருநாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட முனையும் கருநாடக அரசைக் கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் எதிரில், இன்று (31.05.2026), காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் வி.மோகன், மாநில இளைஞர் அணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், மாணவர் கழக பொறுப்பாளர் தேவநர்மதா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட தி.மு.க.செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், சி.பி.அய்.எம்.மாவட்டச் செயலாளர் முருகையன், தி.மு.க.நகரச் செயலாளர் பிரகாஷ், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் ஹாஜாமைதீன், ம.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் குத்புதீன், எஸ்.டி.பி.அய் மாவட்டத் தலைவர் மாஸ் அஜீஸ் ஃபை, ஒன்றிய தி.மு.க. செயலாளர் தேவா ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். இறுதியாக நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
அவர் தமது உரையில், 1986 ஆம் ஆண்டு ஆகிய அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திராவிடர் கழகம் வழங்கியதையும் அதன் பிறகு தொடர்ந்து போராடி வருவதையும் அதன் தொடர்ச்சியாக இப்போது மேகதாது அணைக்கட்டும் முன்னெடுப்பை கருநாடகா அரசு எடுத்து வருகிறது என்பதையும் அதனால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டியும், கருநாடக அரசின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு மற்றும் உச்ச நதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றிய பின், திருவாரூர் நகர துணைச் செயலாளர் துரைராஜ் – சுதா ஆகியோரின் மகள் அக்ஷரா – திவாகர் இணையரின் ஆண் குழந்தைக்கு ‘போராட்ட வீரர்’ என்று பெயர் சூட்டினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை மாவட்ட காப்பாளர் பெ.வீரையன், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைத்து கட்சி சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக திருவாரூர் மாவட்ட செயலாளர் கோ.பிளாட்டோ நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
