ராஜஸ்தான், மே 12 ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பாகவே இணையத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து, ராஜஸ்தான் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியது. அதில், கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், கடந்த மே ஒன்றாம் தேதி சிகாரில் உள்ள தனது நண்பருக்கு கேள்வித் தாளை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர், வாட்ஸ் அப், பயிற்சி மய்யங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வினாத்தாளில் கேட்கப்பட்ட 300 கேள்விகளில் ஏறத்தாழ 150 கேள்விகள் நீட் தேர்வில் அப்படியே இடம் பெற்றிருந்ததாகவும், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஒத்துப் போனதாகவும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, டேராடூன், சிகார் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 13 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு வதந்தி என்றும் அவை மாணவர்களைக் குழப்புவதற்காகப் பரப்பப்படுபவை எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
