புதுடில்லி, ஏப்.30 அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரப் போவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசைச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் காலத்திற்காகக் காத்திருந்த தற்காலிக நிம்மதி இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது. ஏப்ரல் 29-ஆம் தேதிக்குப் பிறகு கவனித்துப் பாருங்கள்; பெட்ரோல், டீசல் என அனைத்துப் பொருட்களின் விலையும் உயரப் போகிறது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது, அந்த லாபத்தை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மோடி அரசு தனது பையிலேயே வைத்துக் கொண்டது. ஆனால், இப்போது விலை உயரும் சூழல் வரும்போது, அந்த முழுப் பாரத்தையும் பொதுமக்கள் மீது சுமத்தத் துடிக்கிறது.
“மலிவான காலத்தில் மக்களைச் சுரண்டிவிட்டு, விலைவாசி உயர்வு வரும்போது மக்களைத் தவிக்கவிடும் அரசு இது.” தேர்தல் ஆதாயத்திற்காக விலையைத் தற்காலிகமாக உயராமல் தடுத்து வைத்திருந்த ஒன்றிய அரசு, தற்போது வாக்குகளைப் பெற்று முடித்த கையோடு மக்களின் பாக்கெட்டுகளுக்கு வேட்டு வைக்கத் தயாராகிவிட்டதாக ராகுல் காந்தி தனது பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
5 மாநிலத் தேர்தல் நிறைவடைந்த சூழலில் ராகுல் காந்தியின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.ஏப்ரல் 29-க்குப் பிறகு எரிபொருள் விலை அதிரடியாக உயரும் என அவர் கணித்துள்ளார்.
