சென்னை, ஏப்.25 மின் தளவாடங்களில் ஏற்படும் பழுதை 30 நிமிடங்களில் சரி செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வீடு, அலுவலகங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிப்பதோடு, மின்மாற்றிகள், மின் விநியோகப் பெட்டி உள்ளிட்ட சாதனங்கள், அதிக மின்பளு காரணமாக பழுதாவதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. அதேபோல், இரவில் ஏசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது.
இந்நிலையில் மின் தளவாடங் களில் ஏற்படும் பழுதை 30 நிமிடங் களில் சரி செய்து உடனடியாக விநியோகத்தை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: துணை மின்நிலையங்களில் இருந்து, மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, மின் தளவாடங்களின் உதவியுடன், மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், இரண்டாவது வழித்தடத்தில் மின்சாரம் அனுப்பும் வசதி உள்ளது. இதேபோல், மின்மாற்றிகளில் இருந்து வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், மற்றொன்றின் வாயிலாக மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. வெயிலால் மக்கள் சிரமப்படும் நிலையில், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டால், மாற்று வழித்தடத்தில் விரைவாக மின்சாரத்தை வழங்க வேண்டும்.
மேலும், 30 நிமிடங்களுக்குள் பழுதை சரி செய்து, மின்சாரம் வழங்க வேண்டும் என, பிரிவு அலுவலகப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தேவைப்படும் மாற்று சாதனங்களை நேரடியாக வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிக்காக ஏற்கெனவே, ஒரு அலுவலகத்துக்கு 5 முதல் 8 பணியாளர்கள் தற்காலிகமாக நிய மிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

