உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் அவரது உதவியாளர் முகுந்தானந்த கிரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய காவல்துறைக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) உத்தரவிட்டுள்ளது.
தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் சௌராசியா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கண்ணியத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதோடு, இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்துமாறு காவல்துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கை சாகும்பரி பீடாதிஸ்வரர் அசுதோஷ் பிரம்மச்சாரி மகாராஜ் என்பவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார். “குரு சேவை” என்ற பெயரில் சிறுவர்களை அவிமுக்தேஸ்வரானந்தன் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
