தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் லட்சியப் பரவலுக்கு முன்னோடிகள் ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலரும், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரும் தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இன்று ம. சிங்காரவேலர் பிறந்த நாளாகும் (18.2.1860).
தந்தை பெரியார் ‘ஆரம்ப காலத்தில் நடத்திய, மக்களுக்கு அறிவு கொளுத்திய ‘பச்சை அட்டை’ ‘குடிஅரசு’ வார ஏடு செய்த அறிவுப் புரட்சிக்கு தனது ஆழ்ந்த கொள்கைச் செறிவான கட்டுரைகள் மூலம் தோழர் ம. சிங்காரவேலர் சிறப்பேற்றினார்.
அவ்வேட்டில் தொடர்ச்சியாக தோழர் சிங்கார வேலர் எழுதிய கட்டுரைகளை நூல்களாகவும் ஆக்கிய – பரப்பிய பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.
ஈரோடு சம தர்ம திட்டத்தினை (1932) தந்தை பெரியார் உருவாக்க பெரிதும் உறுதுணையாக இருந்தார் ம.சிங்காரவேலர் – மேலும் சுயமரியாதை மாநாடுகள் பலவற்றிலும் பங்கேற்றவர்.
சிறந்த நாடாளுமன்றவாதியான இவர், லண்டனில் படித்து திரும்பியவர்.
எம்.பி.யாக இருந்த பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவர்கள் எழுதிய ஓர் ஆங்கில தன் வரலாறு – குறிப்புகள் நூலில்,
‘‘வருங்காலத்தில் இந்தியாவில் வரலாற்றால் பேசப்படுவோர் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தோழர் ம. சிங்காரவேலர், மற்றொருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பி்ட்டுள்ளதைவிட அவர்களது ஒப்புவமையிலா கொள்கை லட்சியப் பயணத்துக்கு என்ன சான்று வேண்டும்?
திராவிட இயக்கம், தி.மு.க.வும் அவரது தொண்டினைப் போற்றி தமிழ்நாடு அரசு சார்ந்த கட்டடப் பெயர் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) அவருக்கு சிலை முதலியன அமைத்துள்ளதும் மற்றொரு சான்றாகும்.
வாழ்க தோழர் சிங்காரவேலர்!
வருக அவர் உழைத்த பொதுவுடைமைச் சமூகம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
18.2.2026
சென்னை
