பீகார், பிப்.11 பீகாரில் உள்ள வழி பாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேட மிட்டுப் பிச்சை எடுத்து வந்த முதிய வர் ஒருவரை, ‘பங்களாதேசி’ எனச் சந்தேகித்து ஹிந்து அமைப்பினர் கடுமையாகத் தாக்கி பள்ளத்தில் தள்ளி விட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர், சிவன் வேடமணிந்து பீகாரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஹிந்து அமைப்பினர் சிலர், அவரது பெயரைக் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். அவர் பதிலளித்த பின்னரும் திருப்தி யடையாத அவர்கள், ‘‘நீ ஹிந்து என்றால் காயத்ரி மந்திரம் சொல்’’ எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு அந்த முதியவர், ‘‘நான் படிக்காதவன், சிறுவயதிலிருந்தே ராமன், சிவன், அனுமன் என வேட மிட்டுப் பிழைப்பு நடத்தி வருகிறேன்’’ என்று உருக்கமாகக் கூறியுள்ளார். எனினும், விடாத அந்தக் கும்பல் ஆதார் அட்டையைக் கேட்டுள்ளது. தனது ஆதார் அட்டை ஊரில் இருப்ப தாக அவர் கூறியதையடுத்து, ‘‘நீ பங்களாதேசியா?’’ எனக் கூச்சலிட்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.
தாக்குதலின் போது அவரிடமிருந்த சூலாயுதம் மற்றும் அன்றைய நாள் பிச்சையாகக் கிடைத்த சில்லறைக் காசுகளை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டது. ‘‘வேடத்தைக் கலைத்த பிறகுதான் இந்தச் சில்லறையை வைத்து நான் உணவு உண்ண வேண்டும், பணத்தைக் கொடுத்துவிடுங்கள்’’ என அவர் கெஞ்சியும், அவர்கள் ஆவேசத்துடன் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பலரும் இக்கொடூரத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் அவரை அங்கிருந்து விரட்ட மிகவும் உயரமான பகுதியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
கீழேவிழுந்த அவருக்குப் பின்னால் கூட்டமாக இளைஞர்கள் ஓடும் காணொலி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
‘கடவுள்’ வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘ஹிந்து அமைப்பினர்’ உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
Leave a Comment
