சென்னை, அக். 9- உயர் கல்வியில் சிறந்த மய்யமாக தமிழ்நாடு திகழ்கிறது என கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் பேசினார்.
பன்னாட்டு ஆசிரியர் நாள் விழா
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி.வைஷ் ணவ கல்லூரியில் பன்னாட்டு ஆசிரியர் நாள் விழா நேற்று (8.10.2025) காலை கொண்டாடப்பட் டது. இதில் தலைமை விருந்தினராக அண்ணா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பாலகுருசாமி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் நில சீர்திருத்தம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டார்.விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரியின் முதல்வர் சந்தோஷ்பாபு, கல்லூரியின் செயலாளர் அசோக்குமார் முந்த்ரா, பொருளாளர் அசோக் கேடியா, என்.அய்.ஆர்.எப்.ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்வியில் சிறந்த மய்யம்
கூடுதல் தலைமை செயலாளர் விஜயகுமார் பேசியதாவது:-
உயர் கல்வியில் தமிழ்நாட்டின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதத் திற்கு மேல் உள்ளது. இது இந்தியாவிலேயே கூடுதல் ஆகும். ஏன் அமெரிக்காவில் கூட 47 சதவீதம் பேர் தான் உயர்கல்வி சேர்க்கை இருப்பதாக இணையதளத்தில் கூறப்படுகிறது. இது தான் நமது மாணவர்கள் அதிகளவில் உலக நாடுகளில் சென்று வேலை செய்வதற்கான அடித்தளம் ஆகும். இதனால் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்த மையமாக திகழ்கிறது.
தேசிய ஆசிரியர் நாளில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் 1975-ம் ஆண்டு முதல் இப்போது வரை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரையிலான ஆசிரியர்கள் பலருடன் நான் இன்றும் தொடர்பில் இருந்து வருகிறேன். நான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது ராமேஸ்வரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது.
செயல் வடிவம்
நான் அண்ணா நகரில் இருந்து மாநில கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது சேத்துப்பட்டு ஏரியை பார்த்தபடி செல்வேன். எப்போது நான் மீன்வளத்துறைசெயலாளராக நியமிக்கப்பட்டேனோ அப்போது அந்த பகுதியில் ஓர் அழகான இயற்கை பூங்காவை வடிவமைத்தோம். லண்டன் பொருளியல் பள்ளியில் படித்த போது பொதுக்காப்பீடு குறித்து படித்தேன். பின்னர் இது குறித்து அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரிடம் கூறினேன். அதைத் தொடர்ந்து கலைஞர் காப்பீடு திட்டம் வந்தது. இதேபோன்று 108 ஆம்புலன்ஸ் திட்டமும் வந்தது, எனது வாழ்வில் தாக்கத்தை ஏற்டுத்திய நிகழ்ச்சிகளை சமுதாயத்திற்காக செயல்வடிவம் செய்துள்ளேன் இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு முதலிடம்
மேனாள் துணை வேந்தர் பாலகுருசாமி பேசும்போது இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. ஆசிரியர்கள் வெறும் பாடத்திட்டத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் போதாது. மாணவர்களை புதிய சிந்தனையாளர்களாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும்” என்று பேசினார்.