புதுடில்லி, ஜூன் 18- இந்தியாவின் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (ஜூன் 16, 2025) அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங் கள் ஆகியவற்றின் பனிப்பொழிவு பகுதிகளைப் பொறுத்தவரை அக்டோபர் 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் பொறுத்தவரை மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த மிகப்பெரிய பணியில் சுமார் 34 லட்சம் கணக் கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், சுமார் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் டிஜிட்டல் சாதனங்களுடன் ஈடுபடுவர்.
கணக்கெடுப்பின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். இவ்வாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வீட்டின் நிலை, சொத்துகள் மற்றும் வசதிகள் தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு (எச்எல்ஓ) ஒரு கட்டமாகவும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் தொடர்பான மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றொரு கட்டமாகவும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் பதிவு செய்யப்படவுள்ளது.
இதற்கு முன் 2011இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாட்டில் நடத்தப்படும் 16ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும் இது. மேலும், சுதந்திரத்துக்குப் பின்னர் நடத்தப்படும் எட்டாவது கணக்கெடுப்பு இது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகக்கடுமையான தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.