சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு வரை இருந்த வீடுகளின் எண்ணிக்கையை விட தற்போது 15 சதவீத வீடுகள் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 3.21 கோடி வீடுகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போதைய கணக்கெடுப்பில் அவை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17ஆம் தேதி தொடங்கியது. மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தலைமையில் தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் பேர் மக்கள் தொகை கணக்கெடுக்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
மாநில அளவில் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளில் கணக்கெடுக்கப்பட்ட வீடுகளை சரி பார்த்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடங்கி இருக்கிறது. அதன்படி 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த தேசியமக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்தமாக 3.21 கோடி வீடுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த எண்ணிக்கை தற்போது 10 முதல் 15 வரை சதவிகிதம் வரை அதிகரித்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் அறை அடிப்படையில் தற்போது வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை கட்டட வளாக அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. புதிய கணக்கெடுப்பில் புதிய வீடுகள் தொகுதி வீடுகள் உயர்ந்திருக்கிறது.
2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. அப்போது நகரப் பகுதிகளில் ஃபிளாட்களில் வசிப்போர் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9.269 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
8,260 பேர் வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சியில் இன்னும் கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் மண்டல வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
