சென்னை, ஆக.22- “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (21.8.2026) பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு முக்கியமான விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்குவதாக இந்த அரசு முடிவு எடுத்து அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய்யே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் காரை பெற மாட்டோம்.
அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.” என்று கூறினார்.
ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது
எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று (21.8.2026) பேசியதாவது;
ஜோதிடர் சொல்ல வேண்டுமா?
தனது டேபிளில் பைல் இருப்பதாக வும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் முதலமைச்சர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிக்கை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூக வலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.
