ராஞ்சி, ஆக.11– ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் வன்முறையை பயன் படுத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
இதுகுறித்து மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் கூறுகையில், “நாங்கள் அமைதியாக பேரணியில் ஈடுபட்டோம். லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்பது அரசின் பொறுப்பு. ஆனால் அரசு எங்களைக் கலைக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த மாணவர் இயக்கம் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
