லக்னோ, ஜூலை 31 உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய காவல் துறை காவலர் ஒருவரை அரசியல் செல்வாக்கின் காரணமாக மீண்டும் பணியில் சேர்த்ததும், அவரே 10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த நிகழ்வம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வழக்கு
உத்தரப் பிரதேசக் காவல் துறையில் பணியாற்றி வந்த அபிஷேக் என்பவர் மீது, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறுமி ஒருவரை பாலியல்வன் கொடுமை செய்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இக்கொடூரத்தைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும் பணியில்…
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அபிஷேக், ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரின் அழுத்தத்தின் காரணமாக கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் அணுகும் அவசர உதவி ரோந்துப் பிரிவிலேயே அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது பெரும் கேள்வி எழுப்பியது.
சிறுமியைக் கடத்தி படுகொலை
இந்நிலையில் கடந்த ஜூலை 28 அன்று, தாய் ஒருவர் தனது 10 வயது மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பணியில் சேர்ந்த பாலியல் வன்கொடுமை குற்றவாளிஅபிசேக் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு
ஏற்கெனவே பாலியல் வழக்கில் சிக்கிய ஒருவருக்கு, அரசியல்வாதிகளின் தயவால் மீண்டும் பணி வழங்கப்பட்டதும், அதிலும் குறிப்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு சார்ந்த அவசர உதவிப் பிரிவிலேயே அவரை அமர்த்தியதும் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து ‘காட்டாட்சி’ நடப்பதையே நிரூபிப்பதாகக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
