புதுடில்லி, ஜூலை 1 கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhoor) என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ஆபரேஷனில் 6 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஒன்றிய அரசு அண்மையில்தான் பொதுவெளியில் வெளியிட்டது. மேலும், வீரமரணமடைந்த அந்த 6 வீரர்களின் பெயர்களும் டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் (National War Memorial) பொறிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில்
தவறான தகவல்
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பாஜாக அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் ராணுவ வீரர்கள் துறையின் தலைவர் கர்னல் ரோஹித் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று முற்றிலும் தவறான, உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார்.”
காங்கிரசின்
முக்கிய கோரிக்கைகள்
ஒன்றிய அரசு நாட்டின் பாதுகாப்பு விவகாரத்திலும், வீரர்களின் தியாகத்திலும் அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டிய கர்னல் ரோஹித் சவுத்ரி கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்:
நாடாளுமன்றத்தில் தவறான தகவல் தந்து நாட்டு மக்களை திசைதிருப்பிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தனது பதவியை விட்டு விலகவேண்டும்.
நமது வீரர்களின் உயரிய தியாகத்தை மறைத்து, அவர்களுக்குரிய மரியாதையைப் பறித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் ‘புனித’த்தைக் கெடுக்கும் வகையில் பொய்யான தகவலைப் பதிவு செய்த ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக ‘உரிமை மீறல் தீர்மானம்’ (Privilege Motion) கொண்டு வரப்பட வேண்டும்.
“மோடி அரசு தொடர்ந்து ராணுவ வீரர்களின் வீரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. உண்மை நிலவரங்களை மறைப்பதன் மூலம் நமது வீரர்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் இந்த அரசு துரோகம் இழைக்கிறது,” என்றும் கர்னல் ரோஹித் சவுத்ரி சாடியுள்ளார்.
