நிர்மல், ஜூன் 10- தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். சமீபத்தில் இக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில், கிராமத்தினர் அனைவரும் ஒருமனதாக ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அதன்படி, “தங்களது பிள்ளைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கக் கூடாது” எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் குறித்து அந்த ஊராட்சியின் மன்றத் தலைவி படிகலா லட்சுமி கூறுகையில்:
“அரசுப் பள்ளிகளில் தான் நன்கு தகுதிபெற்ற, படித்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும், பிள்ளைகள் விளையாடுவதற்குப் பரந்த விளையாட்டு மைதானம், அறிவியல் சோதனைக் கூடம் எனப் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதனால், தனியார் பள்ளிகளைத் தவிர்த்து, எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் படையெடுக்கும் இந்நாட்களில், அரசுப் பள்ளிகளின் தரத்தை நம்பி ஒரு கிராமமே திரண்டு வந்து எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
