கோவை, ஜூன் 5 கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நேற்று (4.6.2026 )நடைபெற்றது. இந்த புதிய அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்தும், மின்வெட்டுப் பிரச்சினை குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுமக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால், புதிய அரசு பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும், மின்விநியோக நிலைமை குறித்து இதுவரை எந்தவொரு முழுமையான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை.
மின்சாரத் துறை என்பது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு முக்கியத் துறை ஆகும். திமுக ஆட்சிக்காலத்தில் உச்சபட்ச மின்தேவை இருந்தபோதும், எவ்வித தடையுமின்றி சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது. புதிய குழுக்கள் ஏமாற்று வேலை: மின்வாரிய ஒப்பந்தம் நடைமுறைகள் ஏற்ெகனவே பல கட்ட கண்காணிப்புகளுடன், மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுக்களின் இறுதி ஒப்புதலோடுதான் நடைபெற்று வருகின்றன. அப்படியிருக்க, தற்போது புதிதாக 3 குழுக்களை அமைப்பது என்பது புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் செயலாகும்.
மின்வாரியத்தில் ஹார்டிஸ்க் காணாமல் போனது உண்மையாக இருந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, ‘மின்துறையை சீரமைக்கப் போகிறோம்’ என்று சாக்குப்போக்கு சொல்வது மின்வெட்டுப் பிரச்சினையை திசைதிருப்பும் செயலாகும். அரசு உடனடியாக மின்வெட்டைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைப் பொறுத்தவரை எந்தவொரு அரசுக்கும் கால அவகாசம் வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும், அதைச் செய்ய தற்போதைய அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
