புளியங்குடி, ஜூன் 4- தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 23 நாட்களில் 64 கொலை சம்பவங்களும், 111 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளதாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் புளியங்குடியில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது:
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: 23 நாட்களில் 63 கொலைகள்
“தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 23 நாள்கள் கடந்துவிட்டன. இந்த குறுகிய காலத்தில் 64 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 111 பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன. இதில் 61 சம்பவங்கள் குழந்தைகளுக்கு எதிரானது என்பது மிகுந்த வேதனைக்குரியது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும். அதை விடுத்து திமுக மீது பழி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நிதி நிலை சரியில்லை என்று சொல்லி அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக்கூடாது.”
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்குக் கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று தவெக வாக்குறுதி அளித்து, இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்று சாடினார்.
மேலும், திமுக ஆட்சியில் இருந்தபோது தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறை வேற்றிக் காட்டினார் என்பதை சுட்டிக்காட்டினார்.
“எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்பது தி.மு.க.வுக்குத் தெரியும். தற்போதைய அரசுக்கு நாங்கள் அவகாசம் தருகிறோம்.
ஆனால் தவறுகள் தொடர்ந்தால், மக்களுக்காகப் போராடவும், அதைச் சுட்டிக்காட்டவும் தி.மு.க. ஒருபோதும் தவறாது. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்காக உறுதியோடு நிற்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான்” என்று கனிமொழி பேசினார்.
