அகமதாபாத், மே 29 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாமியார் ஆசாராம் பாபு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்களும் அறக்கட்டளைகளும் உள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் பலமுறை பிணையில் வெளிவந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் பிணையில் உள்ளார்.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
ஆயுள் தண்டனை உறுதி
சிறுமியைத் தனிப்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தர விட்டுள்ளது.
அதே வேளையில், சிறுமியை “கூட்டுப் பாலியல் வன்கொடுமை” செய்த குற்றச்சாட்டில் இருந்தும், அவர் மீது பதியப்பட்ட போக்சோ பிரிவு 5(ஜி)/6 மற்றும் சதித் திட்டம் தீட்டியதற்கான அய்பிசி பிரிவு 120(பி) ஆகிய வழக்குகளில் இருந்தும் ஆசாராம் பாபுவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்த வழக்கில் ஆசாராமுடன் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த சஞ்சிதா குப்தா மற்றும் சரத் சந்திரா ஆகிய இருவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
