புதுடில்லி, மே 29 மணிப்பூர் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) வெளிமாநிலத்தில் இருந்து நியமித்துக்கொள்வதற்கு மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய டிஜிபி ராஜீவ் சிங் வரும் மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார். அம்மாநிலத்தில் நீண்டநாட்களாக நிலவி வரும் அசாதாரணமான சூழல் மற்றும் அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு தகுதியான அதிகாரியை புதிய டிஜிபியாக நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்ஜி, விபுல் எம். பன்சோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டதாவது:
“மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் தனித்துவமான உண்மைகள், சவால்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில அதிகாரியை டிஜிபியாக நியமிக்கக் கோரும் மாநில அரசின் இந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த மனு அனுமதிக்கப்படுகின்றது. மணிப்பூருக்கு வெளியில் இருந்து ஒருவரை டிஜிபியாக நியமிக்க மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.” மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கவும், சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
