சென்னை, மே 28 திமுகவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பதோ அல்லது போராட்டத்தில் ஈடுபடுவதோ தற்போதைய சூழலில் தேவையற்றது என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் (விசிக) ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:
தவெக-வுக்கு ஆதரவு அளித்ததன் பின்னணி
நடப்புத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அவர்கள் ஆட்சியமைக்க கூடுதலாக 11 இடங்கள் தேவைப்பட்டன. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுவிடக் கூடாது, மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வந்துவிடக் கூடாது என்ற ஜனநாயக நோக்கிலேயே தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், அய்யூஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன.
அமைச்சரவையில் சேர வேண்டும் என்று கட்சியின் உயர்நிலைக்குழுவில் முதலில் விவாதிக்கப்பட்டது. ஆனால், பொதுச்செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்த பிறகு, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பது என்று இறுதி முடிவு எடுத்தோம். ஆனால், இந்த முடிவை வைத்து, முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவிக்காக திருமாவளவன் பேரம் பேசுகிறார் என திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டன. இப்போது திமுகவின் ஆ.ராசாவும் நாம் எடுத்த இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலினிடம்
முன்கூட்டியே விளக்கம்
முன்கூட்டியே விளக்கம்
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கும்போதே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இடதுசாரி கட்சிகளின் முடிவின் அடிப்படையிலேயே இந்த ஆதரவை வழங்குகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தினேன். அதற்கு அவரும், “நீங்கள் தாராளமாக ஆதரவு நல்கலாம்” என்று தனது இசைவைத் தெரிவித்தார்.
எனினும், அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்ற இறுதி முடிவை ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாகச் சொல்ல சூழல் அமையவில்லை. ஆனால், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டேன். எனவே, திமுகவுக்கு எதிராக விசிகவினர் விமர்சனம் செய்வதோ, போராட்டத்தில் ஈடுபடுவதோ தேவையற்றது.
“திமுக கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நாம் எவ்வளவு உறுதுணையாக இருந்தோம் என்பது ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதவ் அர்ஜூனாவோடு சேர்ந்து நான் சதி செய்ததாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.”
பட்டியலினத்தவர் வாக்கு வங்கி சரிவா? திருமாவளவன் மறுப்பு
இந்தத் தேர்தலில் அனைத்துத் தரப்பு வாக்குகளும் பரவலாகச் சிதறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால், விசிகவின் பட்டியலினத்தவர் வாக்குகள் மட்டுமே சிதறியதால் தான் திமுக தோல்வியடைந்தது என்பது போல ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இத்தேர்தலில் பாஜக 9 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் நிலையான வாக்கு வங்கிகளிலுமே சரிவு ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பட்டியலி னத்தவர் வாக்குகளா? ஒட்டு மொத்தமாக வாக்குகள் சரிந் திருக்கும் போது, விசிகவுக்கு மட்டுமே இழப்பு ஏற்பட்டது போலவும், பட்டியலினத்தவர் வாக்கு வங்கி மட்டுமே சரிந்துவிட்டது போலவும் திட்டமிட்டு அவ தூறு பரப்புகிறார்கள் இவ்வாறு திருமாவளவன் தனது காணொலிப் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
