புதுடில்லி, மே 25- லடாக்கின் லே பகுதியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், மேஜர் ஜெனரல் உட்பட மூன்று இந்திய ராணுவ அதிகாரிகள் நல்வாய்ப்பாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
மலைப்பகுதியில் நேர்ந்த விபத்து
கடந்த மே 20 அன்று, லடாக்கின் லே அருகே உள்ள மலைப்பாங்கான டாங்ஸ்டே (Tangste) பகுதியில் ராணுவத்திற்குச் சொந்தமான ‘சீட்டா’ (Cheetah) ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த ஹெலிகாப்டரை லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜர் ஆகியோர் இயக்கி வந்தனர். இதில் 3ஆவது காலாட்படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா பயணியாகப் பயணம் செய்தார்.மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்தது. எனினும், நல்வாய்ப்பாக ஹெலிகாப்டரில் இருந்த மூன்று அதிகாரிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
நெகிழ்ச்சிப் பின்னணி: விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, கடுமையான சூழலிலும் தங்களின் மன தைரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் ஒரு தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டனர். விபத்துக்குள்ளாகி சிதைந்து கிடக்கும் ஹெலிகாப்டரின் அருகே உள்ள பாறைகளில், மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா மற்ற இரு அதிகாரிகளுடன் அமர்ந்திருக்கும் அந்தப் படம், ராணுவ வீரர்களின் அசாத்திய துணிச்சலைக் காட்டுவதாக நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
